Prime Minister Modi meets PMK Anbumani Ramadas!

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாமகவின்தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.