Skip to main content

''கலைஞர் ஆட்சியில் வந்த திட்டங்களால்தான் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது'' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

"Power generation increased in Tamil Nadu only because of the projects that came under Kalajanar government"- Minister Senthil Balaji interview

 

விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட தேர்தல் ஆணையத்தில் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோட்டில் கூறினார்.

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டிலிருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750லிருந்து 1000 ஆகவும் உயர்த்தி வழங்க உறுதி அளித்தது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் விதிகள் அமலாக்கப்பட்டுள்ளன. எனவே இலவச மின்சார உயர்வுக்காக அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும். 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் சுமார் 180% வரை உயர்ந்தது. அதை அதிமுக பேசுவதில்லை. திமுக ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

 

சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்றவை உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு 1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரி கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினார்கள். ஆனால், ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. 2006-2011 கலைஞர் ஆட்சியில் வடசென்னை 3 மின் உற்பத்தி நிலையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதைக் கூட அதிமுக ஆட்சி நிறைவேற்றவில்லை. கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால் தான் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது.

 

அதிமுக ஆட்சி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தது. மின்மிகை மாநிலம் என்றால் அதிமுக ஏன் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்து அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதவீதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதவீதம் குறைத்துள்ளோம். ஒரு சதவீதம் குறைத்தால் கூட 560 கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம். அதிமுக ஆட்சியில் மின் விநியோகத்தில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவோம் என அறிவித்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26,000 புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த விவசாயிகள் முதல் வீடுகள் வரை அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.

 

அதிமுக ஆட்சியில் இதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல கோடி மதிப்புள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகள் குறித்து அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கமணியுடன் பகிரங்கமாக விவாதம் செய்ய நான் தயார். அவர் தயாரா?. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32,000 மெகாவட்டாகும். இதை அடுத்த பத்தாண்டுகளில் 64,000 என உயர்த்த திட்டமிட்டு பணிகளை துவக்கி உள்ளோம்.

 

மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ், நூல் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஓபிஎஸ் அணி திமுகவின் பி டீம் என்று இபிஎஸ் அணி கூறுகிறது. அது உண்மை அல்ல. ஆனால் இபிஎஸ் அணி பாஜகவின் பி டீம். அதிமுக ஒன்றுபட்டாலும் இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் திமுகதான் இந்த இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதேநிலை தான் இப்போதும் ஏற்படும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.