Skip to main content

உங்களை விட 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது: எடப்பாடி பழனிசாமி

Published on 15/07/2019 | Edited on 15/07/2019


   
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக எம்எல்ஏ தங்கம்தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

 
தங்கம்தென்னரசு:- தபால்துறையில் போட்டித் தேர்வுகளை ஆங்கிலம்-இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று அறிவித்து அதன்படி நேற்று தேர்வு நடந்து இருக்கிறது. கடந்த மே மாதம் 14-ந்தேதி அனைத்து மாநில மொழிகளிலும் தபால் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். இந்தியை திணிக்கவும், தமிழை ஒதுக்கவும் திட்டமிட்டு மத்திய அரசு இதை செய்திருக்கிறது.
 

எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையிலும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவும் தமிழில் தபால் துறை தேர்வு எழுத அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

eps


அமைச்சர் ஜெயக்குமார்:- தபால் துறை தேர்வின் முதல் தாளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு முதல் தாள் தேர்வு நடந்து இருக்கிறது. 2-வது தாளை தமிழிலும் எழுதலாம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. முதல் தாள் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதை உறுப்பினர் தெரிவித்தார்.
 

இருமொழி கொள்கைகளில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. மாநில மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய உரிமை கொடுக்க வேண்டும் என்பதை இந்த அரசு வற்புறுத்தும். பாராளுமன்றத்தில் இதற்காக உங்கள் உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள். நமது உரிமையை நிலைநாட்ட இந்த அரசு முயற்சி எடுக்கும்.


 

 

சட்டப்பேரவை திமுக துணைத் தலைவர்:- அமைச்சர் அளித்த பதில் அழுத்தமாக இல்லை. இருமொழி கொள்கை என்கிறார். ஒருமித்த கருத்து இருக்கிறது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று குறிப்பிடாமல் வற்புறுத்துவோம் என்று பதில் அளித்து இருக்கிறார்.
 

அமைச்சர் ஜெயக்குமார்:- இருமொழி கொள்கை தான் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரும், எங்கள் பாராளுமன்ற உறுப்பினரும், மேல்சபை உறுப்பினர்களும் வற்புறுத்த வேண்டும் என்பதை தான் தெரிவித்தேன்.
 

துரைமுருகன்:- எங்கள் உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். அதுபற்றி பிரச்சனை இல்லை. அதை விட நாம் அனைவரும் இணைந்து 234 உறுப்பினர்கள் கொண்ட இந்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது தான் பலமிக்கதாக இருக்கும். அதுபற்றி அமைச்சர் குறிப்பிடவே இல்லை.
 

dmk mlas


 

சபாநாயகர்:- அமைச்சர் அரசு தரப்பில் விளக்கம் சொல்லிவிட்டார்.
 

துரைமுருகன்:- இந்தியை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றீர்கள். இதை தீர்மானமாக கொண்டு வந்து வற்புறுத்தலாமே? நமது வெறுப்பை காட்ட வற்புறுத்துவதாக தீர்மானம் கொண்டு வந்தால் என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது. இங்குள்ள 2 பிரச்சனை. இந்தி திணிப்பு. அதை எதிர்த்து தீர்மானம் உண்டா? இல்லையா?
 

ஓ.பன்னீர்செல்வம்:- தபால்துறை தேர்வுகளில் தமிழில் தான் முன்பிருந்தபடி நடத்த வேண்டும் என்பது நம் ஒட்டுமொத்தோரின் கருத்தாக உள்ளது. இந்த பிரச்சனை குறித்து பாராளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் நாளை அ.தி.மு.க. சார்பில் பிரச்சனை எழுப்பப்படும். அங்கு இதற்கு என்ன முடிவினை மத்திய அரசு சொல்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் நமது முடிவு எடுக்கப்படும்.


 

congress mlas

துரைமுருகன்:- துணை முதல்-அமைச்சர் மிக சாதூர்யமாக பதில் சொல்கிறார். நாளைக்கு அங்கு என்ன நடக்கும் என்றால் சபையை ஒத்தி வைத்து விடுவார்கள். எனவே இங்கு நம் மன்றத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தான் கேட்கிறேன்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- துணை முதல்-அமைச்சரும், அமைச்சரும், தெளிவாக பதில் சொல்லி உள்ளனர். இந்த விதியை போட்டது மத்திய அரசு. பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு வாதாடுவதற்கான வாய்ப்பினை நாம் வழங்கி இருக்கிறோம். எனவே அவர்கள் அங்கு வாதாடுவதில் என்ன தவறு உள்ளது. பாராளுமன்றத்தில் ஒரு பிரச்சனையை எழுப்பும் போது தான் அங்கு என்ன பதில் சொல்கிறார்கள்? என்பதை வைத்து ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். அதன் பிறகு நாம் அதற்கேற்ப முடிவு எடுக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முடிவோடு இங்கு வந்துள்ளீர்கள். எப்படியும் வெளிநடப்பு செய்யும் எண்ணத்துடன் வந்திருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இந்த பிரச்சனையில் உங்களுக்கு உள்ள உணர்வு தான் எங்களுக்கும் உள்ளது. பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் என்ன சாதித்தீர்கள்? எங்களை கேள்வி எழுப்பினீர்களே? இப்போது உங்கள் உறுப்பினர்கள் 37 பேர் இருக்கிறார்களே அவர்கள் இதைப்பற்றி அங்கு பேச வேண்டியது தானே. இந்த வி‌ஷயத்தில் நாளை வரை பொறுத்திருக்க மாட்டீர்களா?


 

 

துரைமுருகன்:- இது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சனை. இந்தி திணிப்பு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. உறுப்பினர்கள் காரணம் தேடித் தேடி பார்த்தார்கள். இப்போது இந்த பிரச்சினையை சாக்காக வைத்து வெளிநடப்பு செய்துள்ளனர். எங்களை பொறுத்தவரை உங்களை விட (தி.மு.க.) 100 மடங்கு உணர்வு எங்களுக்கு உள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவையிலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள்.
 

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.