Advertisment

“அதிமுகவின் நிலை மாறும்.. தலை நிமிரும்..” - சசிகலா

publive-image

அதிமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டம் முடிந்ததிலிருந்து அதிரடிநடவடிக்கையை அதிமுக தலைமை எடுத்து வருகிறது. அதிமுக மா.செ. கூட்டம் முடிந்து ஓரிரு நாளில் அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். அதேபோல், தமிழ்மகன் உசேன் திடீரென தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். அதிமுக சட்ட விதிகளில் பல்வேறு மாறுதல்கள் நடைபெற்றன.

Advertisment

இந்நிலையில், இன்று சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த பேரியக்கம். இது உயிர்த் தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான ஒரு இயக்கம். நம் எம்.ஜி.ஆரும். தன்னை ஒரு முதல் தொண்டனாக கருதி முன்னின்று எத்தனையோ சூழ்ச்சிகளையும், தடைகளையும் தாண்டி வென்று எடுத்த ஒரு மாபெரும் இயக்கம். அதே போன்று ஜெயலலிதாவும், எத்தனையோ சோதனையான காலகட்டங்களில், பல்வேறு அடக்கு முறைகளுக்கு அடிபணியாமலும் உறுதியோடு இருந்து, இது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை நிலை நிறுத்தி சென்றுள்ளார்.

Advertisment

publive-image

என் வாழ்நாளில், ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்து, அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் கழகத்தையும் கழகத் தொண்டர்களையும் காப்பதே நம் முதல் கடமை என்று கொள்கையை மனதில் கொண்டுதான் எனது வாழ்க்கை பயணம் இந்த நொடியிலும் சென்றுகொண்டு இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே எளிய தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாக செயல்பட்டு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலைக்கு சென்றதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய நிலையைப் பார்க்கும்போது, இதற்காகவா நம் இருபெரும் தலைவர்களும் தங்கள் இரத்தத்தை வியர்வையாக்கி ஓயாது உழைத்து கழகத்தை காப்பாற்றினார்கள் என்று நினைத்து பார்க்கையில் ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது.

இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காக எத்தனையோ தன்னலமற்றவர்கள் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து தன் வாழ்க்கையை அர்ப்பணிந்து இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பும் தியாகங்களும் எங்கே வீணாக போய் விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது. என்றைக்கு தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது. மேலும் தன் தொண்டர்களையும் மறந்தது. இதனால் ஏளன பேச்சுகளும் சிறுமைப்படுத்துவதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

நம் இயக்கத்தில் எத்தனையோ ஆற்றல்மிகு நிர்வாகிகள், இறமைமிக்க செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள், கழகத்தை தங்கள் உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்துக்கொண்டு இருக்கும் தொண்டர்கள் என ஏராளமானோர் இன்றைக்கும் கழகத்தின் வளர்ச்சி மட்டுமே தங்கள் வாழ்வின் இலட்சியமாக கருதி, கழகம் மீண்டும் அதே பொலிவோடு பழைய நிலைக்குவர வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

publive-image

உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது நீங்கள் அனைவரும் சோர்ந்து போகாமல் தைரியமாக இருங்கள் ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும் விருப்பு வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டு கொண்டு இருக்கின்ற நம் இயக்கத்தை சரி செய்து, மீண்டும் அதை தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், நம் தலைவர்கள் வகுத்த சட்டத் திட்டங்களை, அவர்கள் முன்னெடுத்து சென்ற அதே பாதையில், பிறழாமல் நம் இயக்கத்தை கொண்டு செல்ல, அரசியல் எதிரிகளின் கனவுகளையெல்லாம் தகர்த்து, அவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக நம் இயக்கம் வெளிப்படவும், ஒவ்வொரு தொண்டனும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர் என்று பெருமையோடும், மிடுக்கோடும், கர்வத்தோடும் தன்னை இந்த சமூகத்தில் சொல்லிக் கொள்ளும் வகையில் நம் இயக்கத்தை விரைவில் மாற்றிக் காட்டுவோம். அனைத்து கழக அடிமட்ட தொண்டர்களும் சந்தோசமாக கவலையின்றி இருங்கள் உங்களுடன் தோளோடு தோள் கொடுத்து உங்களுக்காக உழைக்க வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

அண்மைக்காலமாக எந்தவித காரணமும் இல்லாமல் காழ்புணர்ச்சியின் காரணமாக உதாசீனப்படுத்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் தாங்களாக ஒதுங்கி கொண்டு செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் கவலைப்படாமல் சிறிது காலம் பொறுந்து இருங்கள். உங்கள் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை மாறும். தலை நிமிரும். இது உறுதி உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை, எத்தனை இடர்பாடுகள், சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக் கொண்டே இருப்பேன், ஓய்ந்து விடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe