Skip to main content

பொன்பரப்பி, நத்தமேடு சம்பவம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019


 

காவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்  20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல- ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றவும் அதிமுக கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத் தவறி- சட்டம் ஒழுங்கிற்கும்- பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

mkstalin 6565



“வீடுகளை உடைக்கும்” கேடான பழக்கத்திற்கு மீண்டும் தூபம் போட்டு ஒரு சில சக்திகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில்  கலவரம்  ஏற்படுத்தியதை காவல்துறை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது அப்பட்டமான சுயநலம் மட்டுமின்றி- தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி. இந்தப்  போக்கை சம்பந்தப்பட்ட சுயநல சக்திகள் கைவிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இது போன்ற மனப்பான்மை கொண்டோரின் சதித்திட்டங்களை  முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.


 

தேர்தல் நாளன்று ஆம்பூர் பகுதியில் வாக்குசாவடியைக் கைப்பற்ற  முயற்சி நடைபெற்று- துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கிறது. தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நத்தமேடு வாக்குச்சாவடியில் “நான் 6 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏழு வாக்குகள்  போட்டேன். நீ எத்தனை வாக்குகள் போட்டாய்?” என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கிற அளவிற்கு ஒரு வாக்குச்சாவடியையே கைப்பற்றி வாக்களித்த கொடுமையை இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 

 

சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அந்த நிகழ்வை காவல்துறை அனுமதித்தது- வாக்குச்சாவடியை கைப்பற்ற  காவல்துறையே உடந்தையாக இருந்த அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது.  தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிப் பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு- அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பரவலாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

இப்படியொரு அசாதாரண சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவும், தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் பலரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நடத்தியதன் விளைவுதான் இன்றைக்கு ஆங்காங்கே காவல்துறையின் அலட்சியத்தால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 


 

நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் தேர்தல் டி.ஜி.பி.யின்  கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் உள்ள மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்ற நியாயமான கேள்வியே எழுந்துள்ளது. ஆகவே சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல்- சமூக நல்லிணக்கத்திற்குச் சிறிதும்  பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி- பொது அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் சகோதரமனப்பான்மையுடன் சுமுகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கிட வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.