Skip to main content

அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை...: ராமதாஸ் 

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

ramadoss

 

அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் மோசடி மற்றும் பணப்பசிக்கு இன்னொரு இளைஞன் பலி ஆகியிருக்கிறான். இன்னும் வாழ்க்கையைக் கூட வாழத் தொடங்காத அவனது குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில் அதை அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது வேதனையளிக்கிறது.

 

புதுச்சேரி மாநிலம் கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 35 வயது இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில், கடன் வாங்கியும், தமது சொத்துகளை அடகு வைத்தும், வங்கி சேமிப்புகளை கரைத்தும் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். அனைத்தையும் இழந்த நிலையில், வாழ்வதற்கு வழி தெரியாத சூழலில் மனைவியையும், கைக்குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகளையும் பரிதவிக்க விட்டுவிட்டு, நேற்று முன்நாள் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கான காரணம் குறித்து மனைவிக்கு அனுப்பிய ஒலிச் செய்தியில், சூதாட்டத்திற்கு அடிமையாகி 30 லட்சத்துக்கும் கூடுதலான பணத்தை இழந்தது தான் காரணம் என்றும், தமது தற்கொலையையே சாட்சியாக்கி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும்படி பிரச்சாரம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

தனியார் செல்பேசி நிறுவனத்தின் பணியாற்றிய அந்த இளைஞர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்; சொத்துகளை ஈட்டியுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தியுள்ளார். கரோனா ஊரடங்கு காலத்தில் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் சூதாட்டத்தை ஆடத் தொடங்கிய அந்த இளைஞர், தொடக்கத்தில் லட்சக்கணக்கில் பணத்தை ஜெயித்து, அதனால் ஏற்பட்ட போதையில்  சூதாட்டத்திற்கு அடிமையாகி, தாம் ஈட்டிய அனைத்தையும் இழந்துள்ளார். இதற்கு முன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டவர்கள் கூறிய அதே காரணங்களைத் தான் இந்த இளைஞரும் கூறியிருக்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் என மாநில எல்லைகளைக் கடந்து ஆன்லைன் சூதாட்டங்களும், அதில் பணத்தை இழந்தவர்களின் தற்கொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றை தடுக்க வேண்டிய அரசுகள், இவற்றை வேடிக்கைப் பார்க்கின்றன.

 

Ad

 

ஆன்லைன் சூதாட்டங்களின் ஆபத்துகள் குறித்து 4 ஆண்டுகளுக்கு முன்,  2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்திருந்தேன். அண்மையில் கூட ஜூன் 17,  ஜூலை 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், அதன்மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும்  எடுக்காததன் விளைவாக வாழ வேண்டியவர்கள் ஆன்லைன் ரம்மியில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்; ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமை தொடர அனுமதிக்கக்கூடாது.

 

மதுவால் ஒரு குடும்பம் எந்த அளவுக்கு சீரழியுமோ, அதை விட மோசமான சீரழிவுகளை, அதைவிடக் குறைவான காலத்தில் ஆன்லைன் சூதாட்டம் ஏற்படுத்தும். மகாபாரதம் என்பது புராணக்கதையாக இருந்தாலும் கூட, அதில் சித்தரிக்கப்பட்ட சூதாட்டத்தின் தீமைகள் உண்மை. மகாபாரதத்தில் சகுனி எவ்வாறு காய்களை உருட்டி, தருமரை வீழ்த்தினாரோ, அதேபோல் தான் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் கணிணி ரோபோக்கள் செய்யும் செப்படி வித்தைகளால் அப்பாவிகள் வீழ்த்தப்படுகிறார்கள். ஆன்லைன் சூதாட்டம் என்பது புதைமணலை விட மோசமானது; அதிலிருந்து மீண்டு வர முடியாது. இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்களைக் கூற முடியும். அதனால் தான் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பரிசுச்சீட்டு என்ற மோகினிப் பிசாசின் ஆட்டம் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் தாங்கள் உழைத்து ஈட்டிய பணத்தை பரிசுச் சீட்டுகளில் இழந்தனர். அதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர் போராட்டங்களை நடத்தி பரிசுச்சீட்டுகளை தடை செய்யவைத்தது. ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாகத் தடை செய்யப்படவில்லை என்றால், அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்படும். அதை மத்திய மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.

 

Nakkheeran

 

பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்துச் சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியிருக்கும் போதிலும், மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன். மத்திய, மாநில அரசுகளே... ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டபஸ் இன்னும் பல குடும்பங்களை வளைத்து சீரழிப்பதற்கு முன்பாக அதைத் தடை செய்யுங்கள்; அதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.