Skip to main content

ராமதாசுக்கு சில கேள்விகள்... சிவசங்கர்

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 


குரு நினைவு மண்டப விழாவில் நேற்று பேசிய ராமதாஸ் குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார் அரியலூர் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர்.
 

அதில், ‘டாக்டர் ராமதாஸ் ஓர் கைதேர்ந்த அரசியல்வாதி என, பல காலம் பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர். காரணம், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி “அறுவடை” செய்வதில் கெட்டிக்காரராக இருந்தார். அவர் சேரும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சொல்லும் அளவிற்கு ‘கணக்கு’ போட்டு கூட்டணி அமைப்பார். ஆனால் அது ஓர் காலம். கடந்த சில தேர்தல்களாக அவர் அமைக்கும் கூட்டணி தான் ‘தோல்வி கூட்டணி’ ஆக அமைகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்தும் ‘தோல்விக் கூட்டணியில்’ சேர்ந்தார். இதற்கு காரணமும் ‘அறுவடை’ தான் என பத்திரிக்கைகள், ஊடகங்கள் பேசின. 

 

S. S. Sivasankar


 

பாட்டாளி மக்கள் கட்சி தோற்றது அவர் எதிர்பார்த்தது தான். மத்தியில் கூட்டணி அரசு அமைந்திருக்கிற சூழலில், தன் மகன் அன்புமணி வெற்றி பெற்றிருந்தால் அமைச்சர் ஆகியிருக்கலாம், இப்போது அது நடக்காமல் போய்விட்டதே என்ற விரக்தியில் உள்ளார். விரக்தி மேலிடுகிற போது எந்தக் கட்சி மேலாவது பாய்ந்து, குற்றம் சொல்லி தன் ‘காய்ச்சலை’ தீர்த்துக் கொள்வது வழக்கம். அது போல சந்தர்ப்பத்திற்காக சில மாதங்களாக காத்திருந்தார் ராமதாஸ். நேற்று (17.09.2019) தான் அந்த சந்தர்ப்பம் வாய்த்தது அவருக்கு. மறைந்த சட்டமன்ற உறுப்பினர் குரு அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு விழா அந்த வாய்ப்பாக அமைந்தது. 
 

வழக்கமாக தான் பேச நினைப்பதை, குருவை பேச வைத்து குளிர் காய்வது ராமதாஸின் வாடிக்கை. இப்போது குரு இல்லாத சூழலில், குரு பெயரை பயன்படுத்தி பா.ம.கவை உயிர்பிக்க நினைக்கிறார். குரு நினைவு மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசும் போது, “இங்கே, இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், அன்புமணி அவர்களும் கோடிட்டுக் காட்டினார்கள். குருவினுடைய வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்பொழுது ஆண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியவர்கள். அவரை கொல்வதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார்கள். அது வைத்திக்கு தெரியும். அப்படி அந்த திட்டங்களை நிறைவேறாமல் செய்தவர்கள் நானும், ஜி.கே.மணி அவர்களும். அது தெரிந்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்கு உடனடியாக அவரை போக சொல்லி அந்த திட்டம் நிறைவேறாமல் செய்வதற்கு. இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம். குருவை கொள்வதற்கு சதி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் என்று பேசியிருக்கிறார்.
 

நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
 

1. தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ?
 

2. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ?
 

3. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் தி.மு.க உடன் கூட்டணி வைத்தீர்கள் ?
 

4. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார் ?
 

2011 ஆம் ஆண்டு தி.மு.க – பா.ம.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.கவுக்கு என தி.மு.க பேச்சுவார்த்தை குழு சொல்லி விட்டது. பா.ம.க குழு ஜெயங்கொண்டம் தொகுதி குருவுக்கு வேண்டும் என கேட்டது. ஒரு நாள் பேச்சுவார்த்தை நின்று போனது. பிறகு அன்று கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் அன்புமணி பேசி, அவர் கழகத் தலைவர் ஸ்டாலினிடம் பேசி ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.கவுக்கு வழங்கப்பட்டது. மறைந்த குரு அவர்கள் அறிவாலயம் சென்று கலைஞரிடத்திலே வாழ்த்து பெற்றார். கலைஞர், அப்போது குருவை தட்டிக் கொடுத்து “ஜெயங்கொண்டத்திலே ஜெயம் கொள்வாய்”, என வாழ்த்தியதை குரு எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொண்டார். குருவும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த குருவை தி.மு.க கொலை செய்ய பார்த்தது என சொல்வது எவ்வளவு பெரிய பாதகம்?
 

ராமதாஸ் ஏன் இப்படி பிதற்ற வேண்டும், காரணம் இருக்கிறது.
 

 குரு மறைவிற்கு பிறகு, பா.ம.கவின் சரிவு துவங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. அப்போது உதவி இருந்தால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குரு நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அதை குரு அவர்களின் சகோதரியும் தெரிவித்திருந்தார். இந்த சூழலுக்கு பிறகு குரு அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த மன வருத்தத்திற்கிடையே குரு சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்திலும் காட்டப்பட்ட எதிர்ப்பு.


 

 

அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார். முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்க விடாமல் தடுத்தார். குரு நினைவிடத்திற்கு குருவின் மகன், மகளையே செல்ல விடாமல் தடுத்தார்.
 

 வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது ‘குருவை கொல்ல முயற்சி’ என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு.


 

 

காடுவெட்டி குரு அவர்களை பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய் வாய்ப்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு. அது தான் உண்மையும். காடுவெட்டி குருவுக்கு அதிமுக ஆட்சியில் நடந்த அராஜகங்களை மறந்துவிட்டு ‘தேர்தல்கால அறுவடைக்காக’ அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து தடபுடலாக அறுசுவை விருந்தளித்த ராமதாஸ் அவர்கள் திமுக மீது பாய்வதற்கு தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்னொரு காரணம்.
 

 திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியப் பெரு மக்களுக்காக ஆற்றிய தொண்டினை நினைவுகூர்ந்து அச்சமுதாய மக்கள் பெருவாரியாக திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கி விட்டார்கள் என்ற எரிச்சலிலும், ராமதாஸ் சுயநலத்திற்கு அரசியலை பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள் என்பதால் திசை திருப்பும் அரசியலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுக மீது பழி போட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக, குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
 

 இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.

 

சிவசங்கரின் அறிக்கைக்கு பின்னர் பாமக துணை பொதுச்செயலாளர் வைத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.09.2019 அன்று காடுவெட்டியில் ஜெ.குருவின் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. அதில் ராமதாஸ், திமுகவைப் பற்றி பேசினார். இதற்கு அரியலூர் மாவட்ட வாரிசு அரசியல்வாதி ஒருவர் பதில் கூறியுள்ளார். இருந்தாலும் அவரின் கேள்விக்கு நான் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன்.
 

ஜெ.குருவை முதன் முதலில் 149 நாட்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது திமுகதான். 2011 -ம் கூட்டணி எப்படி அமைந்தது என்று அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஜெயங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டு ஜெ.குரு போட்டியிட்டார். ஆனால் கலைஞரே யங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு என்று அறிவித்தும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. அதையும் மீறி குரு வெற்றி பெற்றார்.
 

இவ்வளவு காலம் கழித்து இக்குற்றச்சாட்டை இப்போது ஏன் கூற வேண்டும் என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாவிற்கான பதிலை ராமதாஸ் 2008ம் ஆண்டே கூறிவிட்டார்.
 

குரு மறைந்த பிறகு பல வதந்திகளையும், அவதூறுகளையும் வாரி இறைத்தார்கள். இந்த சூழ்ச்சிகளை உணர்ந்த வன்னியர்கள் இவர்களது குற்றச்சாட்டுகளை இம்மியளவும் ஏற்காமல் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதை சட்டப்படியும் சரி இல்லை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.