Skip to main content

21 போராளிகளின் குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது உங்களுக்கு தெரியுமா? ராமதாஸுக்கு மு.ஞானமூர்த்தி கேள்வி

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

 

 

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கலைஞர் அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும். ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். 
 

இந்த நிலையில் ''மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார். 
 

ராமதாஸ் : வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது.
 

போராளி : வன்னியர்கள் மட்டுமல்ல. அவர் எந்த சாதியையும் இழிவுபடுத்தியவர் இல்லை.
 

ராமதாஸ் : வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20% இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை. 
 


போராளி : எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு உங்களை உதாசீனப்படுத்திய பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தானே உங்களை அழைத்துப் பேசி 20 % இடஒதுக்கீடு வழங்கினார். 

 

ramadoss - mg


 

ராமதாஸ் : தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 விழுக்காட்டிலிருந்து 49% ஆக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.
 

போராளி : சட்டநாதன் கமிஷனை அமைத்ததே கலைஞர்தானே. அன்றைக்கு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா? அதன் பிறகு கலைஞரோடு பல ஆண்டுகாலம் நட்புறவோடு இருந்து பல சலுகைகளை அனுபவித்து வந்தீரே அப்போது ஏன் தனி இட ஒதுக்கீடு கேட்கவில்லை?
 

ராமதாஸ் : அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.
 

போராளி : சாலை மறியலில் உயிரிழந்த 21 போராளிகளின் குடும்பங்களுக்கு இதுவரை நீங்கள் செய்த உதவிகள் என்ன? அந்த குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் தெரியுமா?.
 

ராமதாஸ் : அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார்.
 

போராளி : கலைஞர் கெட்ட நோக்கத்தில்தான் தந்தார் என்றால் உங்கள் மகன் அன்புமணி திருமணத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களே வருக! வருக! என்று வருந்தி அழைத்தீர்களே அவரிடம் கேட்டு பெற்றிருக்கலாமே ஏன் முயலவில்லை.
 

ராமதாஸ் : வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். 
 

போராளி : இது ஒரு அப்பட்டமான பொய். எம்ஜிஆர் உங்களை மட்டும் அழைக்கவில்லை, 94 சாதி சங்கங்களை அழைத்தார். கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அனைவரையும் அனுப்பிவிட்டார். எந்த முடிவையும் அவர் எடுக்கவும் இல்லை. அறிவிக்கவும் இல்லை.
 

ராமதாஸ் : ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 
 

போராளி : அப்போது ஆளுனராக இருந்த அலெஸாண்டர் அவர்கள் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என அதற்கான ஃபைலை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டார். மத்திய அரசும் இட ஒதுக்கீடு மாநில அரசு சம்மந்தப்பட்டது எனக்கூறி கிடப்பில் போட்டது என்பதை மறைக்கலாமா மருத்துவரே?
 

ராமதாஸ் : அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989&ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு  20% தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர்  கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன். 
 


போராளி : சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் வேலை. பாமக 10 ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் இருந்தீர்களே என்றைக்காவது சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பேசியதுண்டா? 
 

ராமதாஸ் : ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர்.
 


போராளி : கலைஞர் துரோகம் செய்தார் என்கிறீர்களே விழுப்புரத்தில் மாநாடு நடத்தி கலைஞருக்கு மஞ்சள் சால்வை அணிவித்து நீங்கள் பேசியதை மறந்துவிட்டீரா? திண்டிவனத்திற்கு அருகில் உங்கள் மனைவி பெயரில் கல்லூரி கட்டி கலைஞரை அழைத்து திறக்க வைத்து அதில் பேசியதையும் மறந்துவிட்டீரா மருத்துவரே?
 

ராமதாஸ் : ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக  இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 

போராளி : ஸ்டாலின் இளைஞரணித் தலைவராக இருந்தார். நெருக்கடி நிலை வந்தபோது ஒரு ஆண்டுகாலம் சிறைக்கொட்டடியில் சித்ரவதைப்பட்டார். கழகத்தில் பல தளங்களில் பொருப்பேற்று ஜனநாயக வழியில் தலைவராக உயர்ந்திருக்கிறார். உங்கள் மகன் அன்புமணியின் நிலமையை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் புரியும். உழைப்பே இல்லாமல் பதவிக்கு வந்தவர் யார் என்று. 
 

ராமதாஸ் : 1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள்  திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம்  என்று ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்  சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம்..... அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான். அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே  கலைஞர் அறிவித்தார். அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்.
 


போராளி : இட ஒதுக்கீட்டுக்காக சிறை செல்லும் போராட்டம் 1988முன் நடந்தது தானே. அதன்பிறகு இன்றுவரை ஒருபோராட்டமும் இட ஒதுக்கீடு கேட்டு நடத்தவே இல்லையே. உங்கள் கூற்றுப்படி கலைஞர் தரவில்லை என்றே வைத்துக்கொள்வோம். நீங்கள் கூட்டணி வைத்த ஜெயலலிதாவிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு பெற்றிருக்கலாமே ஏன் பெறவில்லை. ஜெயலலிதா என்றால் நடுக்கமா?
 

ராமதாஸ் : 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் என்ற இ.கா.ப அதிகாரி தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.  இதன்மூலம் 1967 முதல் 1996 வரை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையும் துணைவேந்தராகவோ, காவல்துறை தலைமை இயக்குனராகவோ நியமிக்கவில்லை என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினால் குறிப்பிடப்பட்ட இவர்களின் நியமனமும், பின்னாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக திரு.காசி விஸ்வநாதன் நியமிக்கப் பட்டதும் எனது வலியுறுத்தலின் பெயரில் தான் நடந்தது என்பதும் மு.க.ஸ்டாலின் அறியாத உண்மை.
 

போராளி : உயர் அதிகாரிகளை பணியில் அமர்த்தியது உங்களின் சிபாரிசுதான் என மார்தட்டும் மருத்துவரே உங்கள் அக்காள் மகன் கரூர் டிஎஸ்பி ஆக இருந்த இராதாகிருஷ்ணன் என்பவரை பதவி உயர்வு கொடுத்ததும் உங்கள் சிபாரிசுதானே. உங்கள் மகன் அன்புமணியை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய சுகாதாரத்துறையை கலைஞர் வாங்கிக்கொடுத்தாரே அதுவும் உங்கள் சிபாரிசுதானே. உங்கள் சம்பந்தி டாக்டர் ராஜசேகரன் அவர்களை மத்திய சுகாதாரத்துறை இயக்குனராக நியமிக்க செய்தாரே கலைஞர் அதுவும் உங்கள் சிபாரிசுதானே. 
 

ராமதாஸ் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் கூட வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் போராடித் தான் பெற வேண்டியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததை சுட்டிக்காட்டி, வன்னியர் ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கலைஞரிடம் வலியுறுத்தி வந்தேன். 2000&ஆவது ஆண்டில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டபோது, வன்னியர்களுக்கு வாய்ப்ப்பளிக்க மறுத்து விட்ட கலைஞர், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், உறவினருமான ரவிராஜ பாண்டியன் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதன்பின் இப்படி துரோகம் செய்து விட்டீர்களே? என கலைஞரிடம் சண்டையிட்ட பிறகு தான் 2001-ஆம் ஆண்டில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த குலசேகரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கலைஞரிடம் சண்டையிட்டு தான் பெற்றுத் தந்தேன்.
 


போராளி : கலைஞரிடம் சண்டையிட்டு பல பதவிகளை வன்னியர்களுக்கு பெற்றுத்தந்த நீங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, இப்போது கூட்டணி வைத்துள்ளீர்களே எடப்பாடி பழனிசாமி ஆகிய இவர்களிடம் சண்டைபோட்டு அல்லது சண்டை போடாமல் எத்தனை பதவிகளை வன்னியர் களுக்கு வாங்கி கொடுத்துள்ளீர்கள். கொஞ்சம் பட்டியலை அறிவியுங்களேன்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.