Skip to main content

அதிமுக, பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய சி.வி.சண்முகம் விவகாரம்..! எஸ்.பி.யிடம் மனு அளித்த பாமக எம்.எல்.ஏ..! 

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

PMK MLA Sivakumar met SP of Viluppuram District and given complaint

 

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் பாமக எம்.எல்.ஏ.வாக சமீபத்தில் வெற்றி பெற்றவர் சிவகுமார். இவர், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பதவியில் உள்ளேன். கட்சியில் நான் சிறப்பாக பணியாற்றியதை கண்டு ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் எனக்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்கள். அதில் போட்டியிட்டு  வெற்றிபெற்று தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளேன். 

 

இந்த நிலையில், எங்கள் கூட்டணி கட்சியான அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகத்தை நான் வெற்றி பெற்ற பிறகு அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு முயற்சி செய்தேன். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அப்போது சந்திக்க முடியவில்லை. தற்போது அவரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். இதை பார்த்த சிலர் என் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் வரும் நோக்கத்தில் சில பத்திரிகைகளிலும், மீடியாவிலும் தவறான செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும்  ஜெயராமன், திமுக ராஜா ஆர்ட்ஸ் என்ற முகநூல்  பக்கத்தில்  என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  செய்திகள் பதிவிடப்பட்டுள்ளன. இது எனக்கு பெரும் மன உளைச்சலையும் என் பெயருக்கும் புகழுக்கும்  களங்கமும் ஏற்படுத்தியுள்ளது. என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகள், முகநூல் நபர்கள் மறுப்பு வெளியிட வேண்டும். இதுகுறித்து காவல்துறை விசாரணைக்கு உடனடி உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். 

 

அப்படி இவர் பெயருக்கு என்ன களங்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த 7ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கட்சியினருடன் இருப்பதை அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவகுமார், அவரை மரியாதை நிமித்தமாக சென்று சால்வை அணிவித்து சந்தித்துள்ளார். இதை வைத்து ஒருசில ஊடகங்களில் இதை ஊதி பெரிதாக்கி உள்ளன. விழுப்புரம் தொகுதியில் சி.வி. சண்முகம், சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். அவரது கட்சியில் தீவிர அரசியல் பணிகளை செய்வதற்கு எம்.எல்.ஏ. பதவியில் இருந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்ற நோக்கத்தில் மயிலம் தொகுதியில் பா.ம.க. சார்பில் வெற்றி பெற்ற சிவக்குமாரை ராஜினாமா செய்ய வைத்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் சி.வி. சண்முகம் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக அங்கே  வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு பலனாக சிவகுமாருக்கு வேறு பல வசதிகளை செய்து கொடுக்கப்போவதாகவும் தகவல்கள் பரபரப்பாக சமூக வலைதளங்களிலும் ஆடியோவாகவும் வைரலானது. 

 

இது குறித்து நாம் அதிமுக தரப்பில் விசாரித்தபோது சி.வி. சண்முகம், இடைத் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். காரணம் திமுக ஆளும் கட்சியாக இருப்பதால், மேலும் கடந்த 2016 ல் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். அதற்கான இடைத்தேர்தல் 2019 நடைபெற்றது. அதில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக சார்பில் சி.வி. சண்முகம் சிபாரிசில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆளும்கட்சி அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற வைத்தனர். அதே பார்முலாவை பயன்படுத்தி மயிலம்  தொகுதியில் சண்முகம் போட்டியிட்டால் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக அந்த தொகுதியில் தங்கள் அதிகார பலத்தின் மூலம் கைப்பற்றிவிடும். 

 

இது போன்ற அரசியல் கணக்குகளை எல்லாம் சி.வி. சண்முகம் போட்டிருப்பார். எனவே இது வதந்தியாக, வேண்டுமென்றே கிளப்பிவிடப்படும் செய்தி. அப்படி சி.வி சண்முகம் கிராமப்புற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்று விரும்பியிருந்தால் விக்கிரவாண்டி அல்லது மயிலம் தொகுதிகளில் ஏதாவது ஒன்று கடந்த தேர்தலிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பார். அப்படிப்பட்ட சுயநல எண்ணம் கொண்டவரல்ல எங்கள் கட்சி மாவட்ட செயலாளர் சி.வி. சண்முகம். சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகளை கிளப்பிவிடுவது போல இதையும் கிளப்பிவிட்டுள்ளனர். இதில் துளியும் உண்மை இல்லை என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள் மற்றும் சி.வி .சண்முகத்தின் விசுவாசிகள். இது உண்மையோ பொய்யோ, இந்த தகவல் மிக வேகமாக பரவி பாமக அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.