pmk

Advertisment

Advertisment

இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750- லிருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303- லிருந்து 3,435 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298- லிருந்து 45,300 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தருமபுரி மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி உருவெடுத்திருப்பது மனநிறைவளிக்கிறது. இதே நிலையைத் தக்கவைக்க வாழ்த்துகள் என்றும், சென்னை-புறநகர் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க மற்ற மாவட்டங்களில் வேகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. நேற்று தமிழகத்தின் 33 மாவட்டங்களில் 7 பேருக்கு மட்டும் தான் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கும் செய்தியாகும் என்றும், தமிழகத்தின் 26 மாவட்டங்களில் நேற்று புதிய கரோனா தொற்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதே நிலை தொடர வேண்டும்; தமிழகம் கரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதற்கான நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.