
அண்மையில் பாமகவில் அப்பா ராமதாஸுக்கும் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகாரம் மோதல் வெடித்திருந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருந்தார். ராமதாஸ் -அன்புமணி சந்திப்பைத் தொடர்ந்து குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்திருந்ததும் பேசுபொருளாகி இருந்தது.
நேற்று ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னை வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை முகுந்தன் ராமதாஸை சந்தித்திருந்தார். இந்நிலையில் பாமக தலைமை சில அறிவுறுத்தல்களை கட்சியினருக்கு வழங்கியுள்ளது. ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் போக்கு இருந்த பொழுது விமர்சிக்கும் விதமாக கட்சியினர்எழுதிய பதிவுகளை நீக்க வேண்டும் என்ற உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாகவே இந்த மோதல்போக்கு காரணமாக ராமதாஸை ஆதரிப்பவர்கள் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகவும், அன்புமணி ராமதாஸை ஆதரிப்பவர்கள் ராமதாஸுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த பதிவுகளை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்ட நிலையில் பதிவுகள் நீக்கப்பட்டு வருகிறது.
இதேநேரம் மதுரையில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் பாஜகவுடன் புதிதாக இணையும் கட்சிகள் குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாமகவின் இந்த அவசர அறிவிப்பு பாஜகவில் கூட்டணியில் இணைவதற்கான அறிகுறியா என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.