Skip to main content

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் அன்புமணி? 

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

PMK District Secretaries Meeting to be boycotted by Anbumani

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்றைக்குத்தான் நான் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் உண்டு” எனப் பேசியிருந்தார்.

ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது இன்று (16.05.2025) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியினுடைய அமைப்பு ரீதியிலான  90 மாவட்டச் செயலாளர்கள், 90 மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் அனைவரும் கட்டாயம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டமானது இன்றைக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம், நாளை மகளிர் சங்கம் அதனைத் தொடர்ந்து வன்னியர் சங்கம் என 8 நாட்களுக்கு பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களுடனும் ராமதாஸ் கூட்டம் நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாயுள்ளன. இந்நிலையில் தான் இன்றைய கூட்டத்தை அன்புமணி புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமானது ராமதாஸால் மட்டுமே முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அதனை அன்புமணி புறக்கணிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

சார்ந்த செய்திகள்