Skip to main content

''32 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வராதது வருத்தமளிக்கிறது...''-பாமக அன்புமணி ராமதாஸ் பேச்சு

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

pmk Anbumani speech

 

விழுப்புரம் மாவட்டத்தில் மே ஒன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் 55 ஆண்டுகாலம் இரண்டு கட்சிகள் மட்டும் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. 55 ஆண்டு காலம் என்றால் அது அரை நூற்றாண்டு. ஒரு நீண்ட காலம். ஏன் வேறு யாரும் ஆட்சி செய்யக் கூடாதா? யாருக்கும் தகுதி இல்லையா? நமக்கு என்ன தகுதி இல்லை. எல்லா தகுதியும் நமக்கு இருக்கு. நமக்கு செயல்திட்டம் இருக்கு. எல்லாவற்றுக்கும் மேல் வேகத்தோடும் எழுச்சியோடும் கோடிக்கணக்கான எனது தம்பிகள் இருக்கிறார்கள். எந்த கட்சியிலாவது இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்களா? எந்த கட்சியிலும் கிடையாது. நமது மிகப்பெரிய பலம் இளைஞர்கள். அந்த மாற்றத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டுவர வேண்டுமென்று மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த தினம் நம்முடைய தினம்தான். இது பாட்டாளிகளுடைய தினம், தொழிலாளர்களுடைய தினம். காரணம் நாம் எல்லோரும் அடித்தட்டு மக்கள், உழைக்கின்ற மக்கள். எனக்கு இதில் சின்ன வருத்தம் என்னவென்றால் திமுக தொடங்கி 18 வருடத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது. 

 

1949 ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட திமுக 1967ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக 1972-ல் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறது. ஆனால் நாம் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் ஆட்சிக்கு வர முடியாத சூழல் இருக்கிறது. அதில் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. நம்மிடம் எல்லாமே இருக்கு. எல்லா தகுதிகளும் இருக்கு. எல்லா திறமைகளும் இருக்கு. செயல் திட்டத்திலிருந்து நவீன திட்டம், தொலைநோக்கு திட்டம், தமிழ்நாடு அடுத்த ஐந்தாண்டுகளில் எப்படி இருக்கவேண்டும், அடுத்த பத்தாண்டுகளில் எப்படி இருக்கவேண்டும், அடுத்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் தொலைநோக்கு திட்டங்கள் நம்மிடம் இருக்கிறது. அதை செயல்படுத்த அந்த அதிகாரம் நம்மிடம் இல்லை. எனக்கு பதவி ஆசை எல்லாம் ஒன்றும் கிடையாது. அதுவும் குறிப்பாக எனக்கு பதவி ஆசை இல்லை. 35 வயதில் மத்திய அமைச்சராக்கி என்னை டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். டெல்லியில் எல்லாத்தையும் நான் பார்த்துட்டேன். டெல்லியில் மட்டுமல்ல உலகத் தலைவர்கள் எல்லாரையும் பார்த்து விட்டேன். எல்லாமே அத்துபடி எனக்கு. அதனால் எனக்கு பதவி ஆசை நிச்சயமாக கிடையாது. என்னுடைய நோக்கம் நீங்கள் முன்னேற வேண்டும். உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். தமிழ்நாடு முன்னேற வேண்டும்''என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.