ADVERTISEMENT

"இத்திட்டங்கள் கைவிடப்பட்டால் அது பா.ம.கவின் வெற்றியே" - அன்புமணி ராமதாஸ்

05:18 PM Apr 08, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் புதிதாக மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியில் சுரங்கம் அமைக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில், ஒருபோதும் காவிரி டெல்டா பகுதியில் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என உறுதியளித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், இத்திட்டத்தைக் கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இத்திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், "தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய நிலக்கரித் திட்டங்களை ஏலப்பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தியிருப்பதாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருக்கிறார். அவ்வாறு அவை நீக்கப்பட்டால் மகிழ்ச்சி.

என்.எல்.சி நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக 40 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறோம். கடந்த ஓராண்டில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம், என்.எல்.சிக்கு பூட்டுப் போடும் போராட்டம், கடலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம், கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள், பல்வேறு அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உட்பட 20க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தி விழிப்பை ஏற்படுத்தியது பா.ம.க தான். இத்திட்டங்கள் கைவிடப்பட்டால் அது பா.ம.கவின் வெற்றியே.

கைவிடப்படும் 3 திட்டங்களை விட என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான இத்திட்டங்களின் பெரும் பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தான் வருகிறது.

மூன்று நிலக்கரித் திட்டங்கள் எதற்காக கைவிடப்பட்டனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் இந்தத் திட்டங்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டு மக்கள் நலனை மதிக்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அதே உணர்வுடன் என்.எல்.சி மூன்றாம் சுரங்கம், வீராணம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டத்தையும் கைவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 3 திட்டங்களையும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி மூன்றாம் சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT