தமிழகம் வரும் பிரதமர் மோடி; காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

PM Modi is coming to Tamil Nadu Congress party struggle

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை வரும் ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்காகச் சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு ஒன்றிய நிதி ஒதுக்கீட்டில் பாராபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.

அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது ஒன்றிய அரசு. இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது (கு. செல்வப்பெருந்தகை) தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Bridge congress pamban Selvaperunthagai
இதையும் படியுங்கள்
Subscribe