Skip to main content

'தயவு செய்து கால தாமதம் செய்யாதீர்கள்' - இபிஎஸ் மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 'Please do not delay'-Supreme Court orders in EPS petition

 

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியில் மேனகா என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

 

தற்பொழுது ஒற்றைத் தலைமை பிரச்சனையால் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கின்ற சூழலில் எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் இதுவரை தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடவில்லை என்றால் மட்டுமே நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதுவே இந்த காலதாமதத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம் அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. இன்று அந்த இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ''ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக கையொப்பம் போட்டு கொடுக்கக் கூடிய வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட என்னை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளது. அதனால் நீதிமன்றம் இந்த இடைத்தேர்தலில் எங்களுடைய மனுவை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுங்கள்' என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'தயவு செய்து பதிலளிக்க கால தாமதம் செய்யாதீர்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.