Skip to main content

அடக்க விலை ரூ.17.66; விற்பனை விலை ரூ.73.28 - இது நியாயமா? ராமதாஸ் கண்டனம்

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

 

கச்சா எண்ணெயின் விலை சரிவைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை  லிட்டருக்கு தலா ரூ. 20 வீதம் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க விலை ரூ.17.66; விற்பனை விலை ரூ.73.28 - இது நியாயமா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாகவும், எண்ணெய் உற்பத்தி நாடுகளிடையிலான  போட்டி காரணமாகவும் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் அதற்கு  இணையாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த கொள்ளை லாபப்போக்கு கண்டிக்கத்தக்கது.

 

petrol Diesel



 

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்திருப்பதால் போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன.
 

கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக இருந்தன.   மார்ச் 10&ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 30.20 டாலராக குறைந்து விட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை ரூ.73.28, ரூ.65.59 என்ற அளவில் தான் குறைந்துள்ளது. இது உண்மையாக குறைக்கப்பட வேண்டிய விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.


 

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை மிகவும் எளிதாக நிரூபிக்க முடியும். ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை  61.13 டாலர் எனும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.35.65 ஆகும். இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர்  கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்து தான்   ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர் தான் என்பதால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 17.66 மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37&க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. இது மிகவும் அநியாயமாகும்.
 

அதேபோல், இன்றைய நிலையில் ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவு ரூ.19.10 மட்டுமே. அதனுடன்   மத்திய கலால் வரி ரூ.15.83, விற்பனையாளர் கமிஷன் ரூ.2.47 மற்றும் மாநில அரசின் 24.04 விழுக்காடு விற்பனை வரி ரூ.8.99 சேர்த்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.46.39க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.21.20 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இயல்பாக விற்கப்பட வேண்டிய விலையை விட 50% அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.


 

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.17.66 மட்டுமே. ஆனால், அதைவிட 4 மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அடக்கவிலையை விட அதிகமாக மத்திய அரசும், மாநில அரசும் வரி வசூல் செய்கின்றன. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை குறைவை கணக்கில் காட்டாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.32 என எண்ணெய் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. இந்த வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.15 மறைமுக லாபம் கிடைக்கிறது. இந்த மறைமுக லாபத்தின் பெரும் பகுதியை அரசின் கணக்கில் சேர்க்கும் வகையில் கலால் வரியை கணிசமாக, அதாவது குறைந்தது ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
 

இப்போதே ஒரு லிட்டருக்கு ரூ.19.98, டீசலுக்கு ரூ.15.83 வீதம் மத்திய அரசு கலால் வரி வசூலிக்கிறது.  இதில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த போது, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்ததன் மூலம் உயர்த்தப்பட்டவை ஆகும். இப்போது இன்னும் கூடுதலாக ரூ.10 கலால் வரியை உயர்த்த நினைப்பது  ஏற்க முடியாததாகும். பொருளாதார மந்த நிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பயன்கள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும்  அரசே அனுபவிக்கக்கூடாது.
 

எனவே, கச்சா எண்ணெயின் விலை சரிவைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை  லிட்டருக்கு தலா ரூ. 20 வீதம் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.