Skip to main content

பெட்ரோல், டீசல் விலை... மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் உள்நோக்கம் என்ன? ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம்

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

 

கச்சா எண்ணெய் விலை ஏறும் போது தினசரி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிய எண்ணெய் நிறுவனங்கள், விலை இறங்கும் போது தினசரி இறக்காதது ஏன் ?. மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் உள்நோக்கம் என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும் போது பைசா கணக்கில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பது கடும் கண்டனத்திற்குரியது.  

 

E.R.Eswaran




கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தி புதிய உச்சம் தொட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் போது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.


2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 111.80 டாலராக இருந்த போதே பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.76 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 61.12 ரூபாய்க்கும் தான் விற்கப்பட்டது. அதேபோல கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 59.31 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.68 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 68.27 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
 

 

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 73.33 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 66.75 ரூபாய்க்கும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்வது மக்களை ஏமாற்றும் செயல். கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்திருக்க வேண்டும்.


மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்கும் போது அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசலின் விலையை குறைப்பது தான் நியாயம். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் போது மக்கள் தலையில் சுமையை இறக்கி வைப்பதும், விலை வீழ்ச்சியின் போது மொத்த இலாபத்தையும் எண்ணெய் நிறுவனங்களே எடுத்துக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது.



தினசரி விலை மாற்றத்தை கொண்டு வந்ததே மத்தியில் ஆளும் இந்த பாஜக அரசு தான். கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றத்தை ஏற்படுத்தாமல் கார்பரேட் நிறுவனங்கள் இலாபம் அடைய பாஜக அரசு மவுனமாக இருக்கிறாதா என்ற சந்தேகம் எழுகிறது.



தற்போது ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை சரிவை வைத்து கணக்கிட்டு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு கீழும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 40 ரூபாய்க்கு கீழும் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஒப்படைத்துவிட்டோம் என்று தப்பித்து விடக்கூடாது.
 

 


கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன் ?. எனவே கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருக்கும் போது அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால் கச்சா எண்ணெய் கொள்முதலில் வருடத்திற்கு 10,000 கோடி மிச்சமாகும். இப்போது 25 டாலர் குறைந்திருக்கிறது. 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி மிச்சமாகும். அந்த லாபம் அரசுக்கா, கார்பரேட் நிறுவனங்களுக்கா ?. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘பால் விலை உயர்வா?’ - ஆவின் விளக்கம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Is the price of milk high  Aavin explanation

 

ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.

 

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைக்காட்சிகளில் 200 மி.லி. பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால் இன்று முதல் ஊதா (Violet) நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது.

 

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41000 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு, தினசரி 33700 லிட்டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்கள் விருப்பத்திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் கவ் மில்க் (Cow Milk) அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை கவ் மில்க் 200 மி.லி. டிலைட் (Delite) எனும் பெயரில் ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன்படுத்திய பால் (T.M), நிறை கொழுப்பு பால் (FCM) மற்றும் ஆவின் டிலைட் 500 மி.லி பாக்கெட்டுகள் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.