Skip to main content

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக காம்பவுண்டு சுவரை இடித்த தமிழ அரசு !

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

 

periyar

 

நேற்று திருச்சியில் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தை ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் தமிழக நெடுஞ்சாலைதுறை இடித்து தள்ளியது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் முதலிய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுள்ளன.

தந்தை பெரியார் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி வளாகம், அன்னை மணியம்மையார் காலத்தில் மேலும் வளர்ந்து, ஒரு மாபெரும் கல்விச் சோலையாக மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன்மதிப்பும் பெற்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அரை நூற்றாண்டுக் காலமாக தந்தை பெரியார் காலத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறதென்றும், ஆகவே, நீங்களே அகற்ற வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலிருந்து கடந்த 6.3.2019 அன்று நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது. 

அந்தக் கடிதத்திற்கு 11.3.2019 அன்று கீழ்க்கண்டவாறு பதிலிறுக்கப்பட்டுள்ளது. 

``மேற்படி நிலம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் எங்களுக்குச் சொந்தமானது இல்லை; ஆக்கிரமிப்பு உள்ளது என்பதை சர்வே செய்யாமலேயே எப்படிக் கூறுகிறீர்கள்?

அப்படி நீங்கள் சர்வே செய்வதாக இருந்தால், நாங்கள் இல்லாமல் எப்படி சர்வே செய்தீர்கள்? இந்த நிலையில் 7 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள்.

எங்கள் நிறுவனத்தை சற்றும் பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள். நாங்கள் எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. தேவையென்றால் தாங்கள், சர்வேயர் மூலம் எங்கள் முன்னிலையில் நிலத்தை அளந்து கொள்ளலாம். அதைவிடுத்து தாங்கள் தவறாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்`` என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் திருச்சி உதவி கோட்டப் பொறியாளர் அவர்களுக்கு 11.3.2019 நாளன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோட்டப் பொறியாளருக்கு இதன் நகலும் அனுப்பப்பட்டது.

மேலும் 15.3.2019 அன்று மீண்டும் ஒரு கடிதம் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது: 

``பார்வை 2 இல் கண்டுள்ள கடிதத்தின்படி மாநகராட்சி சர்வேயர்கள் வந்து எங்கள் இடத்தை மதியம் 2 மணியளவில் அளந்தார்கள். பார்வை 1 இல் கண்ட தங்கள் கடிதத்தில் 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால், தற்போது அளந்ததில் அதைவிடக் கூடுதலாக 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக சர்வே இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

எங்களின் பார்வையில் அளந்தது எதுவும் சரியில்லை என்பதாகவும், எனவே சரியான அளவுகளுடன் கூடிய அடிப்படை ஆவணங்களை (Basic Records) ஒப்பிட்டு, மீண்டும் அளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அதுவரை பார்வை 1 இல் கண்டுள்ள தங்களது கடிதத்தின் மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்`` என்று திருச்சி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் 15.3.2019 நாளிட்டு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல் கோட்டப் பொறியாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒருமுறை 1.80 மீட்டர் என்றும் இன்னொரு முறை 6 மீட்டர் ஆக்கிரமிப்பு என்றும் முரண்பாடாக சர்வே செய்யப்பட்டது எப்படி? இதில் எது உண்மை? மேலும் கடிதத் தொடர்பு இருந்து கொண்டு இருக்கும் போதே, திடீரென்று அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று (16.3.2019) அவர்கள் கண்ணிமையாக கட்டிக்காத்த பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர்களை பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

இரண்டு முறை சர்வே செய்த போது குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பின் அளவு முரண்பாடாக இருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையில் உள்ள சாலை வரைபடத்தை காட்ட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத் துறையின் கல்லிலிருந்து அளவிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபொழுது, அதையெல்லாம் காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தான்தோன்றித்தனமாக இடிக்கப்பட்டுள்ள - பெண்கள் அதிகம் படிக்கும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புச் சுற்றுச்சுவரை இடித்ததில், எந்த அளவும் நியாயம் இல்லை. இதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

6.3.2019 நாளிட்ட கடிதத்தில் நேரில் தெரிவித்ததாக சொல்லப்படுவது என்பதெல்லாம் உண்மையல்ல. நேரில் யாரிடம் தெரிவித்தார்கள்? தெரிவித்தவர்கள் யார்? என்ற விவரம் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பதுபோல பொறுப்பு வாய்ந்த அதிகாரி எழுதலாமா? இது அப்பட்டமான பொய்யைத் தவிர வேறு அல்ல.

மேலும் பெறுநர் என்பதில் பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என்று இருக்கிறது. அந்தக் கல்வி நிறுவனம் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானது - யாருக்குக் கடிதம் அனுப்பப்படவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கடிதம் எழுதுவது பொறுப்பற்ற காரியம் அல்லவா!

ஏதோ அவசர கதியில் இடித்துத் தள்ளவேண்டும் என்ற வெறியில் யாரோ சிலரின் கண்ணசைப்பில் நடந்ததாகத்தான் இதனைக் கருதவேண்டியுள்ளது.

இந்தக் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் (பெண்கள்) முதலியன இயங்கி வருகின்றன. சுற்றுச்சுவர் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்று நன்கு தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாக இடித்துத் தள்ளியதன் காரணமாக பெண்கள் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபரீதம் எதுவும் நடந்தால், அதற்கு நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பாகும்.

தஞ்சை வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் - திறந்தவெளி சிறைச்சாலைக்கான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன - அவற்றை உடனடியாக அகற்றிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், இதுவரை துரும்பளவும் நடவடிக்கையை எடுக்காத இந்த அ.இ.அ.தி.மு.க. அரசு பெரியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளுகிறது என்றால், இந்த அரசு யாருக்கான அரசு என்பது திட்டவட்டமாகவே தெரிகிறது.

அன்று டில்லியில் பி.ஜே.பி. ஆட்சியில் பெரியார் மய்யத்தை சட்ட விரோதமாக இடித்துத் தள்ளியதுபோல, (அதன் பின்விளைவு அரசின் நடவடிக்கை தவறானது என்று ஆனது) இன்று அ.இ.அ.தி.மு.க. அரசு அரசியல் நோக்கத்தோடு இந்த சட்ட விரோத, நியாய விரோத அழிபழி செயலில் இறங்கி உள்ளது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். 

இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஆத்திரப்படாமல், அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று அறிக்கை கொடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.