Skip to main content

வேட்பாளார் அவர்; வேட்புமனுத் தாக்கல் செய்தது இவர்! - விருத்தாசலம் காங்கிரஸில் குழப்பம்!

Published on 17/03/2021 | Edited on 18/03/2021
People in confusion on candidate as they filed nomination papers for the contest

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி சார்பாக, பா.ம.க வேட்பாளர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து நெய்வேலி தொகுதியிலுள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணனும், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் உள்ளிட்ட பலரும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருந்தனர். 

 

வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விருத்தாசலம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். தற்போது விருத்தாசலம் பகுதியில் கூட்டணியில் உள்ள முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ராதாகிருஷ்ணன் ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், அவர் தற்போது வரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.  அதேசமயம் கடந்த சில தினங்களாக தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர் தான் அத்தொகுதியின் வேட்பாளர் என்று முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

 

தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாற்றப்பட்டாரா? என பொதுமக்கள் குழம்பி இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு காங்கிரஸ் துண்டு மற்றும் காங்கிரஸ் கொடியுடன் விருத்தாசலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நீதிராஜன் மாலை அணிந்தபடி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக விருதாச்சலம் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி பெயரை சொல்லாமல், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரம் பெயரைச் சொல்லி முழக்கங்கள் எழுப்பி வாழ்த்துகள் தெரிவித்து மாலை அணிவித்தனர்.

 

காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மனுத் தாக்கல் செய்யாத நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு பிரமுகர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். எனவே, தொகுதி வேட்பாளர் நீதிராஜனா அல்லது ராதாகிருஷ்ணனா என கட்சியினர் குழம்பிப் போயுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையின் உட்கட்சிப் பூசலால், விருத்தாசலம் தொகுதியில் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

People in confusion on candidate as they filed nomination papers for the contest

 

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நீதிராஜன், “பாரம்பரியமாக தங்களின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். தற்போது பத்தாம் வகுப்பு கூட படிக்காதவரும், கொல்லைப்புறமாக நெய்வேலி பகுதியில் இருந்து, விருத்தாசலம் தொகுதிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வந்திருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு எவ்வித வாக்குகளும் கிடைக்காது. காங்கிரஸ் தலைமை கை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை தனக்கு தரும் என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக” தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.