இது குறித்து விசாரித்த போது, ராகுல் ராஜினாமா செய்த பிறகு, அகில இந்திய காங்கிரஸுக்கு இன்னும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்காலிகமான தலைவராகத்தான் சோனியாகாந்தி பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சோனியாவுக்குப் பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கட்சியின் சீனியர் தலைவர்களான மன்மோகன்சிங், அகமதுபடேல், கபில்சிபில், அபிசேக் சிங்வி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சென்று இருந்தனர். அவர்களுடன் இன்றைய அரசியல் நெருக்கடிகள் குறித்து சீரியசாக ஆலோசனை செய்திருக்கிறார் சோனியா. அப்போது, விரைவில் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. தற்காலிக தலைவரே கட்சியை நடத்துவது ஆரோக்கியமானது இல்லை என்று சோனியா கூற, நீங்களே மீண்டும் கட்சியின் தலைவரானால் தான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகம் பிறக்கும் என்று சீனியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். சோனியாவோ, தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அதை மறுத்ததோடு, தலைவர் பதவிக்கு ப.சிதம்பரத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தன் ஆலோசனையை கூறியிருப்பதாக கூறுகின்றனர்.
இதைக்கேட்ட சீனியர் லீடர்கள், இது குறித்து காரியக் கமிட்டியை கூட்டி முடிவெடுக்கறது தான் சரியாக இருக்கும். அதற்குமுன் ராகுலின் கருத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதனால் விரைவில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது காங்கிரஸ். திகார் சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு ப.சி. மீதான பார்வை தேசிய அளவில் பதிந்திருப்பதால் ரேஸில் அவர் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.