Skip to main content

மக்களிடம் செல்வோம்.... அவர்கள் மக்களவைக்கு அனுப்புவார்கள்! ராமதாஸ் 

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டால் அவர்கள் நம்மை தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்து மக்களவைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

கடிதத்தில், இந்தியாவில் 17&ஆவது மக்களவையை அமைப்பதற்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11&ஆம் தேதி தொடங்கி மே மாதம் 19&ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இத்தேர்தலுடன் சேர்த்து தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 21 இடங்களில் 18 தொகுதிகளுக்கும், 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் மே 23&ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
 

தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கானத் தேர்தல் ஏப்ரல் 18&ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 19&ஆம் தேதி தொடங்கி 26&ஆம் தேதி நிறைவடைகிறது. 27&ஆம் தேதி பரிசீலிக்கப்படும் மனுக்களைத் திரும்பப்பெற மார்ச் 29&ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்தக் கட்ட பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

 

ramadoss anbumani


 

ஜனநாயகத்தைப் பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் தான் அவர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். கடந்த காலங்களில் அந்தப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக செய்திருக்கிறது. இப்போதும் கூட தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக முதலில் குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்தி உரிமைகளை பெற்றுக் கொடுப்பதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான கூட்டணியில் கூட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.
 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்வது தான் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முதன்மைக் கடமையாக அமைய வேண்டும். அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதும் முக்கியமாகும்.
 

நாடாளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக இருந்த காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் ஆகும். மக்களவைத் தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வெற்றிக்கு பாட்டாளி மக்கள் ஆற்றிய நன்றிக் கடன் பட்டியல் மிக நீண்டது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்திய சுகாதாரத்துறை மற்றும் தொடர்வண்டித்துறை திட்டங்கள்  தான் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இவை தவிர மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மத்திய ஆட்சியாளர்களிடம் நான் போராடி பெற்றுத் தந்ததும், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இந்தியா விடுதலை அடைந்த நாள் முதல் வழங்கப்படாமல் இருந்த பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வழங்கியதும் மக்களால் மறக்க முடியாத நன்மைகளாகும்.
 

அதேபோல், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏராளமான உரிமைகளும், நன்மைகளும் கிடைக்கும்;  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை உறுதி செய்து கொள்ளப்போகும் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் தமிழகத்திற்கு ஏராளமானத் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி கொண்டு வரும் என்பதை வாக்காளர்களிடம் நமது தொண்டர்கள் விளக்க வேண்டும் & தெளிவாக புரிய வைக்க வேண்டும்.
 

அதேநேரத்தில் எதிரணியினர் வெற்றி பெற்றால் தமிழகம் எந்த அளவுக்கு வேட்டைக்காடாக மாற்றப் படும்; அப்பாவி மக்கள் அரும்பாடுபட்டு சேர்த்த நிலங்கள் எவ்வாறு பறிக்கப்படும்; மக்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படும்; பெட்டிக் கடைகளில் தொடங்கி, பியூட்டி பார்லர் & பிரியாணிக் கடை வரை குண்டர்களால் எப்படியெல்லாம் சூறையாடப்படும்; உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை எப்படியெல்லாம் ஊக்குவிக்கப்படும்; பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லும் பெண் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்பன உள்ளிட்ட அனைத்து தீய விளைவுகளையும் தமிழக வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 

இவை குறித்த திட்டங்களை வகுப்பதற்காக அனைத்துத் தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி அளவிலும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிட்டாலும் அதை சொந்தத் தொகுதியாக நினைத்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்ற வேண்டும். கிளை அளவில் தொடங்கி  தொகுதி அளவில் வரை பிரச்சாரக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்கள், வாக்குச்சாவடி பொறுப்புக் குழுக்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த நிமிடத்தில் தொடங்கி வெற்றிக் கனியை பறிக்கும் வரையிலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.
 

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களை சந்தித்து அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது அதிமுக தலைமையில்  பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் அணியால் மட்டுமே சாத்தியம் என்பதை கடந்த கால ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுங்கள். மக்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்டால் அவர்கள் நம்மை தமிழகம் மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்து மக்களவைக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெற்றியை பரிசாகக் கொடுத்து அதிமுக அரசை வலுப்படுத்துவார்கள். இது உறுதி! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.