Parliament deadlocked for third day; A series of riots

Advertisment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மீண்டும் பாஜகவினர், இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பின. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதேபோல் நேற்றும் அவை தொடங்கிய 11 மணியிலிருந்துஅதானி, ராகுல் விவகாரங்களால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி கூச்சலை எழுப்பியதால் மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவெளிக்கு பின் கூடிய அவையில் மீண்டும் கூச்சல் ஏற்பட்டதால் இன்று காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு கூடிய அவையில் அதானி குழும முறைகேடு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ராகுல் நிராகரித்ததால் கூச்சல் குழப்பம் எழுந்தது. அதே வேளையில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் கட்சியும் அமளியில் ஈடுபட்டனர். அதானி மற்றும் ராகுல் என இரு விவகாரங்களில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் இன்றும் அவை முடங்கியது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களையும் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு குரலும் கொடுத்ததால் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் மக்களவையின் சபாநாயகர் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் தொடர் கூச்சல் குழப்பங்கள் காணப்படுவதால் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்தியாவின் ஜனநாயகம் குறித்து வெளிநாட்டில் அவதூறாக பேசியதாக கூறிராகுல்காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தியும்பாஜக உறுப்பினர்கள் ஒருபுறம் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினரும் அதானி விவகாரம், பணவீக்கம் டீசல், பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களுக்காக அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாகநாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளும் இன்றி முடங்கியது.