Skip to main content

“பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்” - ஓ.பி.எஸ் உறுதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
I will send Palaniswami to Tihar Jail soon says Panneerselvam confirmed

திருச்சியில், அ.தி.முக. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பன்னீர்செல்வம், “நாலு பேரை வைத்துக்கொண்டு படாதபாடு பட்டதாக கூறிய பழனிசாமியிடம் தான், அவர்கள் யார் என்று கேட்க வேண்டும். முதல்வரானாலும், பொதுச்செயலாளரானாலும் எந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவர். லோக்சபா தேர்தல், நாட்டை யார் ஆள வேண்டும் என்பதற்கான தேர்தல். 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்தபோது, அவரை வாழ்த்தி துண்டு சீட்டு கொடுத்தேன். அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான பிரச்சனையை பேசி வருகிறேன். அவர்கள் மனம் வெதும்பி உள்ளனர். சுயநலம் காரணமாகத்தான் பழனிசாமி அவர்கள் ஒன்று சேரக் கூடாது என்று சொல்கிறார். 50 ஆண்டுகளாகத் தியாக வாழ்க்கை மேற்கொண்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிப்படி இயக்கத்தை நடத்தினர். அதில் கை வைத்துள்ளார் பழனிசாமி.   அவருடன் இருப்பவர்கள், ‘நாங்கள் என்ன சொன்னாலும் பழனிசாமி கேட்க மறுக்கிறார்’ என்று மன வேதனையோடு பேசுகின்றனர்.

தேர்தலுக்கு முன், ‘நான் முதல்வராக வந்த பின், 3 மாதங்களில் கொடநாடு கொள்ளை வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவேன்’ என்றார் ஸ்டாலின். அவரும் பழனிசாமியும் கூட்டணி வைத்திருப்பதாக நான் சொல்லவில்லை மக்கள் சொல்கின்றனர். ஏன் அந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர் என்று மக்கள் கேட்பதை நானும் கேட்கிறேன். மோடி தான் பிரதமராக வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது. இந்தியா கூட்டணி என்பது ஆண்டிகள் கூடி கட்டிய மடம்.

பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன். அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன்.  வரும் லோக்சபா தேர்தலில் இறைவன் தந்த சின்னத்தில் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க. சின்னம் தொடர்பான விவகாரத்தை உச்சநீதி மன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் 19ம் தேதி பொதுக்குழு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் நீதிக்கு தலை வணங்குவோம். நியாயமான இலக்கை அடைவதற்காக சோர்வு இல்லாமல், அடிக்க அடிக்க எழும் பந்தை போல் எழுவோம். எங்களை யார் பின்னுக்கு தள்ளினாலும் முன்னேறிக் கொண்டுதான் இருப்போம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.