Skip to main content

மகனை தலைவராக்க அப்பா கடும் முயற்சி ! -காங்கிரஸ் கலாட்டா !

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 

          

ஒரு வருடத்துக்கு முன்பு தமிழக காங்கிரஸ் தலைவராக தனது ஆதரவாளர் கே.எஸ் அழகிரியை கொண்டு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம். ஐ.என்.எக்ஸ்.மீடியா ஊழல் வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சூழலில், அவருக்கு ஆதரவாக எந்த துரும்பையும் அழகிரி எடுத்துப் போடவில்லை. சிதம்பரத்தின் ஆதரவாளர்களை புறக்கணிக்கப்பது என்பதில் ஆரம்பித்து பல்வேறு நிலைகளில் அழகிரியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, சிதம்பரத்தின் ஆதரவாளர் என்கிற நிலையையே மறந்து போனார் அழகிரி. இதனால் சிதம்பரம் தரப்புக்கும் அழகிரிக்குமிடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. 

 

congress



           

இந்த சூழலில், சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையானார் சிதம்பரம். அப்போதிலிருந்தே, அழகிரியை மாற்ற வேண்டும் என அவரிடம் போர்க்கொடி தூக்கி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். சிதம்பரமும் அழகிரியின் செயல்பாடுகளில் அதிர்ப்தியடைந்து வந்தார். முக்கிய விசயங்கள் எதுவும் அவரிடம் ஆலோசனை நடத்துவதில்லை சிதம்பரம். இப்படிப்பட்ட சூழலில், மத்திய மோடி அரசின் புதிய தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், மோடி அரசின் பட்ஜெட் குறித்தும் தேவக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
         

வருகிற 15-ந்தேதி சனிக்கிழமை நடக்கும் இந்த பொதுக்கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைக்கப்படவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில்தான் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சிறப்புரையாற்றுகிறார்கள்.  தமிழக காங்கிரஸ் சார்பில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டம் மாநில தலைவர் தலைமையில் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
          

 இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘’ சிதம்பரத்திற்கும் அழகிரிக்குமான விரிசல் விரிவடைந்து கொண்டே வருகிறது. அழகிரியை மாற்றியே ஆக வேண்டும் என சிதம்பரத்திற்கு கொடுக்கப்படும் தொடர் வலியுறுத்தல்களால், தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்து வருகிறார் சிதம்பரம். அதனால்தான், அவர் சிறப்புரையாற்றும் முக்கிய பொதுக்கூட்டத்தில் அழகிரியை அழைக்க வேண்டாம் என கே.ஆர்.ராமசாமியிடம் சொன்னதுடன், ராமசாமி தலைமையிலேயே கூட்டம் நடக்கட்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார் சிதம்பரம். அதன்படிதான் கூட்டம் நடக்கிறது. 



இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை தூக்கிவிட்டு  புதிய தலைவராக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சிதம்பரம் ‘’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் திமுகவை விமர்சித்து அறிக்கை வாசித்திருந்தார் கே.எஸ்.அழகிரி. அந்த அறிக்கை திமுக தலைமையை கோபப்படுத்தியது.  தங்களது அதிர்ப்தியை சோனியாகாந்திக்கும் அப்போது தெரிவித்தது திமுக தலைமை. இதனையடுத்து, அழகிரிக்கு கொடுக்கப்பட்ட அட்வைசின்படி, சமாதான அறிக்கை வெளியிட்டதுடன், மு.க.ஸ்டாலினை சந்தித்தும் சமாதானப்படுத்தினார் அழகிரி. ஆனாலும், அழகிரி மீது திமுகவின் கோபம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டுதானிருக்கிறது. அழகிரிக்கு எதிரான இப்படிப்பட்ட சூழல் இருந்து வருவதாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வரவிருப்பதாலும் அழகிரியை மாற்றும் முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. இதை சரியாகப் பயன்படுத்த திட்டமிட்டிருக்கும் ப.சிதம்பரம், தனது மகனை தலைவராக்க பகீரத முயற்சி எடுத்துள்ளார்.
       

இதற்கிடையே, டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்திருப்பதில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் அப்- செட்டாகியிருப்பதால், தமிழக தலைவர் மாற்றம் குறித்து சோனியாவிடம் ஆலோசிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறார் சிதம்பரம் என்கிறார்கள் காங்கிரஸ் கதர்சட்டையினர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.