Skip to main content

மனு அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி: ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். இதில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அவரது  வெற்றியை எதிர்த்து கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.
 

 

 Puthiya Tamilagam



தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில், நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடைபெறாது என்றும் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். 
 

இந்த நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த கிருஷ்ணசாமி, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பெற்றார். அந்த தொகுதியில் தனிச் சின்னத்தில் நின்று போட்டியிடுகிறார்.
 

அதிமுகவுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டவுடன், ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக தொடர்ந்த மனுவை வாபஸ் பெற முடிவு செய்தார். அதன்படி அந்த வழக்கை திரும்பப்பெறுவதாக மனு அளித்தார். இதையடுத்து கிருஷ்ணசாமி அந்த வழக்கை திரும்பப்பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Former ministers talk to Krishnasamy

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக,புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கே சென்று ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.