Skip to main content

உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு; எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கல்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Order passed by the High Court; Problem for SP Velumani

 

எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய மாநகராட்சி டெண்டர் முறைகேடு விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி சாலைகளின் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 590 கோடி மதிப்பீட்டில் 37 டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அதன்படி அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020 ஆம் ஆண்டில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜெயராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி விளக்கமளித்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

இதனை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை எடுக்க வேண்டியது மாநில அரசு தான். சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது. அதன் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.