Skip to main content

ஒ.பி.எஸ். சொத்துப் பட்டியல்! 

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

OPS Property List

 

தேனி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில் இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்’சின் வேட்புமனுவில் கொடுத்த தகவல்படி, அவர் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்புப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர் செல்வம். இதற்காக, கடந்த 12ஆம் தேதி மதியம், போடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ். 

 

அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டபோது, “வேட்புமனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யலாம்” என்றனர். அதன்படி, ஓரிரு நாட்களில், ஓ.பி.எஸ் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நேற்று (16.03.2021) தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்தனர் ஒபிஎஸ் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி. 

 

OPS Property List

 

அதில் அசையும் சொத்து விவரங்கள்: “ஓ.பன்னீர்செல்வத்திடம் கையில் ரொக்கப் பணமாக 23,500 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியிடம் 3,82,500 ரூபாயும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில், வைப்புத்தொகையாக 11,42,698 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமி பெயரில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகையாக 23,98,824 ரூபாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனத்துக்கோ அல்லது தனி நபருக்கோ ஓ.பன்னீர்செல்வம் கடனாக பணம் கொடுக்கவில்லை என்றும், அவரது மனைவி விஜயலெட்சுமி, தனது கணவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 65,55,411 ரூபாயும், தனது இளைய மகன் ஜெயபிரதீப்பிற்கு 3,12,30,803 ரூபாயும் கடனாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

மேலும் தனது கணவருக்கும், மகனுக்கும் சேர்த்து விஜயலெட்சுமி கொடுத்துள்ள மொத்த தொகை, 3,77,86,214 ரூபாய். ஓ.பி.எஸ்’சிடம் 67,440 ரூபாய் மதிப்புள்ள 16 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும், அவரது மனைவியிடம் 8,43,000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 61,19,162 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக 4,57,52,415 ரூபாயும் உள்ளதாக சொத்துப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னென்ன வாகனங்கள் உள்ளன? ஒபிஎஸ்சிடம் 5,54,980 ரூபாய் மதிப்புள்ள மஹிந்திரா ஜினியோ எல்.ஜி.வி 2011 மாடல் காரும், 17,85,655 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2013 மாடல் காரும், 25,44,789 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2016 மாடல் காரும் என மொத்தம் 48,85,424 ரூபாய் மதிப்புள்ள மூன்று கார்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி பெயரில், மொத்தம் 43,34,377 ரூபாய் மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் வாகனம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.