OPS opposes both BJP and EPS; Announcement!!

கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இரு கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் போட்டியிடவுள்ளது. கர்நாடகத் தேர்தலில் முன்னதாக கூட்டணியில் இணைய அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு போட்டியிட வேண்டாம் கூட்டணிக்கு ஆதரவு மட்டும் அளித்தால் போதும் என்று பாஜக தலைமை கூறிவிட்டதாகத் தகவல் கசிந்தது. மேலும் பாஜக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் அதிமுகவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

Advertisment

தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொடர்ந்து நேற்று எடப்பாடி தலைமையிலான அதிமுக தரப்பு, கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன், புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் அந்தத் தொகுதியில் ஏற்கனவே பாஜக தனது வேட்பாளராக முரளி என்பவரை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு தனது வேட்பாளரை அறிவித்துள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிட இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. அன்பரசனுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் இருந்து நெடுஞ்செழியன் களமிறங்குகிறார். புலிகேசி நகர் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.