Skip to main content

“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..!” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"OPS, Dinakaran who wanted to overthrow the AIADMK ..!" MK Stalin


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் நான்கு மாதத்தில் பழனிசாமியின் ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்ற முடிவோடுதான் வந்துள்ளீர்கள். நான் ரெடி, நீங்க ரெடியா” என பேசினார். மேலும், “வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் பிறந்துள்ளது. 

 

திருவெறும்பூரில் பேசிய முதல்வரை, எடப்பாடி என சொல்ல மாட்டேன். அந்த ஊரைச் சொல்லி, பேரைச் சொன்னால் எங்களுக்கு கேவலமாக உள்ளது என ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் பழனிசாமி என்றே அழைப்பேன். தமிழக முதல்வர் பிரச்சாரத்தில், நேரடியாக ஓட்டுப் போட்டு எந்த முதல்வரும் தேர்வு செய்ய முடியாது என பேசியுள்ளார். யாருமே நேரடியாக முதல்வராக முடியாது. ஆனால், பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பது அவருக்கே தெரியும். 

 

தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைக்கவில்லை. கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வர நாங்கள் விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரவே முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்தது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும்தான்; நாங்கள் அல்ல. 2005ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து கிடப்பில் போடப்பட்டது. மோடி அடிக்கல் நாட்டிய பிறகும் கிடப்பில்தான் உள்ளது. எய்ம்ஸ் வரவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என அ.தி.மு.க. அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் வரவில்லை; ராஜினாமா செய்தாரா? உதயக்குமார், ராஜினாமா செய்யத் தேவையில்லை. வரும் தேர்தலில் அவர், வீட்டுக்கு அனுப்பப்படுவார்” என்று பேசினார். 

 

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்ற வேண்டும் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “கால்வாய் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். 100 நாள் வேலை திட்டத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமென அறிவித்தவுடன், ஆளும் கட்சி அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது” என்றார்.

 

மேலும், “10 ஆண்டுகளாக ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் பின் பழனிச்சாமி பதவியேற்ற பின்பும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. திருமங்கலம் புதிய பேருந்து நிலையம், இரயில்வே மேம்பாலம், திருமங்கலம் பிரதான கால்வாய், மதுரை துணைக்கோள் நகரம் என எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை. இந்த தொகுதியின் அமைச்சர், ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார். ஆனால், ஜெயலலிதா எப்படி மரணமடைந்தார் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பியது துணை முதல்வர்தான்; தி.மு.க. அல்ல.

 

ஜெயலலிதாவுக்கும் தி.மு.க.வுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனையில் இருந்தபோது சரியான தகவல் வெளியிடவில்லை. விசாரனை கமிஷன் 8 முறை அழைத்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்லவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலவரம் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். கரோனா காலத்தில்கூட கொள்ளை அடிக்கக் கூடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம்” என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.