Skip to main content

ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்; அறிவித்த பன்னீர்செல்வம் அணி

 

OPS candidate withdraws; Announced Panneerselvam team

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார். அதே நேரத்தில் தனது வேட்பாளரை அறிவித்த இபிஎஸ் பிப்ரவரி 7ல் வேட்புமனு தாக்கல் செய்வார் எனக் கூறி தென்னரசுவின் வேட்புமனுவை ஒத்திவைத்தார். இதனிடையே அதிமுகவின் பொதுக்குழு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இது காரணமாக ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. 

 

இந்த பொதுக்குழு உறுப்பினர்களில் இபிஎஸ் தரப்பினர் 90%க்கும் மேல் என்பதால் இபிஎஸ் முன் மொழிந்த தென்னரசு தான் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவு எடுக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கட்டுப்பட்டவர். அப்படியிருக்க ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவித்தும் அவரை ஆதரிக்கிறீர்களா மறுக்கிறீர்களா என்று கேட்டும் கடிதம் அனுப்பி இருந்தது வேட்பாளர் தேர்வு முறையாகாது. அது பொது வாக்கெடுப்பு முறையாகும். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்பது உச்சநீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது” எனக் கூறியிருந்தனர்.

 

தொடர்ந்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை டெல்லி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இன்று காலை டெல்லி புறப்பட்டனர். இந்நிலையில் அதிமுக பன்னீர்செல்வம் தரப்போ, தமிழ்மகன் உசேன் நெறிமுறை தவறி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இருந்தது.

 

இந்நிலையில் இன்று காலை ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களது வேட்பாளரான செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. பசுமை வழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் ஒரு மணி நேரமாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர் சந்திப்பில் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக கு.ப. கிருஷ்ணன் கூறியுள்ளார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு என்றும் கு.ப. கிருஷ்ணன் கூறியுள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !