Skip to main content

“மூனு மாசம்னு சொன்னீங்க... முப்பது மாசமாயிடுச்சு!” - முதல்வருக்கு கேள்வி எழுப்பும் ஓ.பி.எஸ்.

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

OPS And TTV Dinakaran kodanadu case

 

கொடநாடு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “கொடநாடு கொள்ளை கூட்டத்திற்கும், சம்மந்தப்பட்ட கொலையாளிகளுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். 24-04-2017 அன்று கொடநாடு பங்களாவில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவரைக் கொலை செய்து அதன் தொடர்ச்சியாக கிருஷ்ண பகதூர் என்ற காவலாளியையும் கொலை செய்துள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் என்பவரையும் கொலை செய்துள்ளார்கள். அதன் பின்னர், இந்த வழக்கில் குற்றவாளி என்று சொல்லப்பட்டிருந்த சயான், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காரில் சென்று கொண்டிருந்த போது லாரியை மோதவிட்டு அந்த இடத்தில் விபத்தை உருவாக்கினார்கள். அந்த விபத்தில், சயானின் மனைவி மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதன் பின்னர் கொடநாடு கம்பூயுட்டர் ஆப்ரேட்டராக இருந்தவரையும் கொலை செய்தார்கள். ஆகவே, இவ்வளவு நடந்ததுக்கு பின்பும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

 

நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லி தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின்  இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்தி கொண்டிருக்கிறார்கள்.

 

கொடநாடு பங்களாவில் ஈடுபட்ட கொள்ளைக் கூட்டத்தை யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டத்தான் இந்த போராட்டம். கொலை செய்தவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதன் பின்னனியில் இருந்து செயல்பட்டவர்களையும் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடிக்கும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த அன்று இரவு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மின்சாரத்தை யார் துண்டித்தார்கள். அந்த மின்சாரத்தை துண்டிக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்தவர் யார் என்பதையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தி அந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், எங்களுடைய உணர்வுகளையும் ஜெயலலிதா மீது நாங்கள் வைத்திருந்த பாசத்தையும் வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க தொண்டர்களும், அ.ம.மு.க தொண்டர்களும் இணைந்து இந்தப் பிரச்சனையை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிரச்சனைக்கு தீர்வு வர வேண்டும்” என்று அவர் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.