Skip to main content

எதிர்க்கட்சி, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போட்டா போட்டி  போராட்டங்கள்

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

மத்திய அரசு சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு வழங்கிய அரிசி மற்றும் பருப்பை வழங்காததைக் கண்டித்தும், மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து அரிசி வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (16.04.2020)  சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

Puducherry



இப்போராட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். இதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாறன், பாஜக எம்.எல்.ஏ சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Puducherry


முதலில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகப் படிக்கட்டு மற்றும் வராண்டாவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் பின்னர் சட்டசபை நுழைவு வாயில் இரும்பு கேட்டுகளைப் பூட்டி மூன்றுபேர் உள்நுழையும் வாயில் முன்பும், மூன்றுபேர் வெளியே செல்லும் வாயிலிலும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

Puducherry

 

http://onelink.to/nknapp


அப்போது அன்பழகன் "முதல்வர் நாராயணசாமி இரு தினங்களில் அரிசி அளிப்பதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்" என்று தெரிவித்துவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சென்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 

அதேசமயம் மஞ்சள் கார்டுக்கு அரிசி வழங்க அனுமதி கோரி அமைச்சர் கந்தசாமி தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜ்நிவாஸ் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், விஜயவேணி, ஜெயமூர்த்தி ஆகியோர் சட்டசபையில் இருந்து நடந்து சென்று ஆளுனர் மாளிகை முன்பு மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க தடையாக இருக்கும் ஆளுனர் கிரண்பேடியை கண்டித்தும், உடனடியாக மஞ்சள் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க அனுமதிக்கக் கோரியும் தர்ணா போராட்டத்தை நடத்தினர்.
 

அங்கு வந்த முதல்வர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட வைத்தார். அப்போது அவர் " மக்களுக்கு அரிசி போடாததற்கு காரணம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிதான். வேண்டுமென்றே கோப்புகளைக்  கிடப்பில்போட்டு கால தாமதம் செய்கிறார்" எனக் குற்றம் சாற்றினார். 
 

இதனிடையே மஞ்சள் குடும்ப அட்டைதார்களுக்கு 10 கிலோ அரிசி வழங்க துணை நிலை ஆளுனர் ஒப்புதல் அளித்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து மஞ்சள் அட்டைதார்களுக்கும் 3 மாதத்திற்கு 10 கிலோ அரிசி வழங்க  ஒப்புதல் அளித்துள்ள கிரண்பேடி  'வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களைத் தவிர்த்து வழங்கலாம்' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

அதேசமயம் மஞ்சள், சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது. அரிசி வழங்கக்கோரி ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.