Skip to main content

கம்யூனிஸ்ட் தலைவர்களை இழிவுபடுத்தி அவதூறு செய்வோரைக் கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
cpi

 

கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்களையும், தலைவர்களையும், தலைமை அலுவலகத்தையும் அவதூறாக பேசிய சமூக விரோதிகளைக் கண்டித்து இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் நான்கு (4) மையங்களின் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் அவதூராக முகநூலில் பதிவிட்ட சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டித்து திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

 

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவிப்பது,

 

‘பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த சில ஆண்டுகளாகவே அமைதியான தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற துடிக்கும் பாரதிய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் காவி பாசிச மதவெறி கும்பல், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தையும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சுதந்திர போராட்ட தியாகிகளையும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் முற்போக்கு ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரை சமூக வலைதளத்தில் அவதூறாக சித்தரித்து பதிவு பதிவேற்றம் செய்தும் தமிழகத்தை வன்முறையாக களமாக மாற்ற துடிக்கின்றனர்.

 

அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தையும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் அவதூராக முகநூலில் பதிவிட்ட சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறைகூவல் விடுத்த நிலையில் அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பகுதியில் நான்கு (4) மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

அவதூராக முகநூலில் பதிவேற்றம் செய்த சமூக விரோதியைக் கைது செய்ய வலியுறுத்தியும் வன்முறையை தூண்டுகிற விதத்தில் பதிவேற்றம் செய்யும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் டி.எஸ்.முருகன் தலைமை தாங்கினார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் சிவக்குமார், தங்கவேல், கலியமூர்த்தி,  வீரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் இளவரசு, நகர செயலாளர் மனோகர், திராவிடர் கழகம் பரந்தாமன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் செல்வகுமார், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

protest image 1

 

அசூர்:

அதேபோல் அரசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமலநாதன் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் வடிவேல் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

protest image 2

 

மட்டப்பட்டு:

மட்டப்பட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கே.குமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

protest image 3

 

பெரியசெவலை:

பெரியசெவலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் என்.கோதண்டபாணி தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தவர்கள் பலரும் பங்கேற்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும்,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.  பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.  இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து  வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது.  அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.

பாஜக அரசை  எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது.  இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன்,  காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story

“இட ஒதுக்கீடு பிடிக்காத கட்சி பாஜக” - திருமாவளவன் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
BJP is a party that does not like reservation says Thirumavalavan

சிதம்பரம்  நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இவர் திங்கள்கிழமை சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்படை, கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பூண்டி குமாரமங்கலம், பிச்சாவரம்,டி.எஸ். பேட்டை, கனகாரப்பட்டு, உத்தமசோழமங்கலம், கொடிபள்ளம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், பெரிய மதகு, மடுவாங்கரை, நஞ்சமகத்துவாழ்க்கை, கிள்ளை உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணிக்கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் வியூகம் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். சனாதன சக்திகள் உங்களிடம் வந்து பசப்பு வார்த்தைகள் கூறி பேசுவார்கள் நம்ப வேண்டாம்.  தேசிய அளவில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.  இட ஒதுக்கீட்டை விரும்பாத கட்சி பாஜக. அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்காது.

அனைத்தையும் அழித்து விடும். ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கூறிய விபி சிங் ஆட்சியை கவிழ்த்தது பாஜக தான். எனவே தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கும் மக்கள் நலத்திட்டங்கள் இடையூறு இல்லாமல் ஏழை மக்களுக்கு கிடைக்க தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். இங்கு பானை சின்னத்திற்கு அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.

இவருடன் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன், திமுக பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கலையரசன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன், விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, திமுக கொத்தங்குடி கிளை செயலாளர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.