one more admk mla suspended eps and ops officially announced

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீண்டும் அ.தி.மு.க. சார்பில் சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது அ.தி.மு.க. தலைமை.

Advertisment

இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாகப் போட்டியிடுவது எனமுடிவுசெய்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று (18/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் தோப்பு வெங்கடாச்சலம். இந்நிலையில், அவர்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (19/03/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க. கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சேந்தமங்கலம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரனுக்குதேர்தல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அ.தி.மு.க.வின் வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் நேற்று (18/03/2021) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.