Skip to main content

அடுத்தடுத்து நீக்கப்படும் எம்.எல்.ஏக்கள்! - அதிர்ச்சியில் அதிமுகவினர்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

one more admk mla suspended eps and ops officially announced

 

முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மீண்டும் அ.தி.மு.க. சார்பில் சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் ஜெயக்குமார் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது அ.தி.மு.க. தலைமை.

 

இதையடுத்து, தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்திய தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாகப் போட்டியிடுவது என முடிவுசெய்தார். அதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று (18/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் தோப்பு வெங்கடாச்சலம். இந்நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். அறிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (19/03/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க. கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, சேந்தமங்கலம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரனுக்கு தேர்தல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அ.தி.மு.க.வின் வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் நேற்று (18/03/2021) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திமுக” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

OPS condemns “DMK for destroying livelihood of future generations”.

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5,699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

 

மாதம் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, பயிற்றுவிக்கும் ஆர்வமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் படிப்பும் பாதிக்கக்கூடும். பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும்.

 

அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள். இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.

 

எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

Next Story

“மார்தட்டிக் கொள்ளும் திமுக பல்கலைக்கழகத்திற்கு நிதியளிக்கவில்லை” - ஓபிஎஸ் கண்டனம்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

"DMK not funding the university" - OPS condemned

 

சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய உரிய நிதியை ஒதுக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துவதாகவும் இதில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “பிரசித்தி பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தைக் கூட தர இயலாத சூழ்நிலை நிலவுவதாகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் மொத்த மாதச் செலவிற்கு 18.61 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், 31-05-2023 அன்றைய நிலவரப்படி சென்னை பல்கலைக்கழகத்திடம் 5 கோடி ரூபாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு மட்டும் 11.5 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இதனைத் தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியிலிருந்தும், அறக்கட்டளை நிதியிலிருந்தும் 7.6 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

மொத்தத்தில், சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தி.மு.க. அரசோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கு கூட நிதியை ஒதுக்காமல் காலந்தாழ்த்தி வருவதாக செய்திகள் வருகின்றன. உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்ககம் அரசுக்கு பரிந்துரைத்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான 11.46 கோடி ரூபாய் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் பங்கு குறித்து எவ்வித விவரமும் தங்களிடம் இல்லை என்று பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமைதான் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.

 

‘நிதிப் பற்றாக்குறை குறைந்துவிட்டது, 'வருவாய்ப் பற்றாக்குறை குறைந்துவிட்டது’ என மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க. அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உரிய நேரத்தில் ஒதுக்காமல் காலந்தாழ்த்துவதும், சென்ற ஆண்டிற்கான கூடுதல் நிதியை இன்னும் அளிக்காமல் இருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

 

முதலமைச்சர் சென்னை பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, உரிய நிதியை, மானியத்தை உடனடியாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடவும், பிற பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியையும் உடனடியாக விடுவித்திடவும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.