ADVERTISEMENT

‘வீராங்கனையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ - இ.பி.எஸ். ட்வீட்

01:09 PM Nov 15, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா. இவருக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்பு காரணமாக கடந்த எட்டாம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சையிலிருந்த பிரியா, உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இன்று (15.11.2022) காலை சரியாக 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

உயிரிழந்த பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூராய்வு முடிந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து பிரியாவின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''இது மிக மிகத் துயரமான சம்பவம். இதை அன்புகூர்ந்து யாரும் அரசியலாகப் பார்க்கக்கூடாது. தூண்டிவிட்டுப் பார்ப்பதற்கான விஷயம் இது அல்ல. இதனை வேறு வகையில் கிளறிவிட்டு அரசியல் செய்வது ஒரு சரியான செயலாக அரசியல் தலைவர்களுக்கு இருக்காது என்று நான் கருதுகிறேன்.'' என்றார்.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்குக் காரணமாக இருந்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பேற்று, இவ்வரசு பிரியா குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT