நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை செயலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக குழு ஒன்றையும் மத்திய அரசுஅமைத்திருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை இன்றுஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை கொடுத்த ஒப்புதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 'இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை எதிர்ப்போம். ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கை. பிராந்திய குரல்களை அழித்து, கூட்டாட்சி தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும் செயல் இது. இந்திய ஜனநாயகத்தின் மீது ஆன இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்' என தெரிவித்துள்ளார்.