
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைந்ததையொட்டி சீமான் அவருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள்(95) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தேனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதில், “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணன் ஓபிஎஸ் அவர்களுடைய தாயார் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ஓபிஎஸ்க்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளார். அவரது வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.