Skip to main content

''953 கோடியில் ஒரு ரூபாயை கூட செலவு செய்யவில்லை; உலக அளவில் தலைகுனிவு'' - திருமாவளவன் எம்.பி பேட்டி

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

NN

 

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அண்மையில் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு தொடர்வண்டி கோர விபத்தை சந்திக்க நேர்ந்தது. இது இந்திய தேசம் மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கி இருக்கிறது. 275 பேர் இதுவரை பலியாகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆயிரம் பேருக்கு மேலானவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இந்த கோர விபத்துக்கு ரயில்வே துறை மற்றும் இந்திய ஒன்றிய அரசின் அலட்சியமான போக்குகள் தான் காரணம் என்று அந்த துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் பொதுமேலாளர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சொல்லுகிறார். சிஏஜி என்கிற அகில இந்திய தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அது ஆட்சியாளர்களால் குறிப்பாக அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தணிக்கையாளர் அறிக்கையின்படி ஒன்றிய அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என வல்லுநர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே துறை அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு விபத்தை இந்திய தேசம் சந்தித்திருப்பது உலக அரங்கில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது விபத்தை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சிக் காலத்தில் 'கவாச் ஸ்கீம்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை கூட அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. அண்மையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தபோது இந்த பாதுகாப்பு திட்டத்திற்கு என்று கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. 953 கோடி., அதில் ஒரு ரூபாய் கூட எடுத்து அவர்கள் செலவு செய்யவில்லை என்று தெரிகிறது. 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுவதற்கு மந்திரி பதவி கொடுக்கிறார் மோடி. இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் வெளிப்படையாக அச்சுறுத்துபவர்களுக்கு மந்திரி பதவி தரப்படுகிறது. மத வெறியர்களுக்கும் சாதி வெறியர்களுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம்; வெறுப்பு அரசியலுக்கு தருகின்ற முக்கியத்துவம் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்கு அளிப்பதில்லை என்பதை இந்த சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

வேட்பாளர்கள் யார்?- விசிக அறிவிப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
nn

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது தங்களுடைய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிதம்பரத்தில் ஏற்கனவே போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து சென்று முதல்வரை சந்தித்து ஆசிபெற்று வரும் நிலையில் இன்று விசிக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. முன்னதாகவே செய்தியாளர் சந்திப்புகளில் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என திருமாவளவன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், ''இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அடையாளப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு இன்று முக்கியமான தேவையாக இல்லை. பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் வேட்கையாக இருக்கிறது. ஆகவே இந்திய அளவில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஒட்டுமொத்தத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவும் இன்று மக்கள் இருக்கிறார்கள்.

மக்கள் ஒருபுறமும் சங்பரிவார் கும்பல் ஒரு புறமும் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறது. நாட்டு மக்கள் ஒருபுறம் நிற்கிறோம் பாரதிய ஜனதா தலைமையிலான சங்பரிவார் ஒருபுறம் இருக்கிறது. எனவே இங்கு யுத்தம் நடப்பது காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் அல்ல, அல்லது இந்தியா கூட்டணிக்கும் என்டிஏ கூட்டணிக்கும் அல்ல. மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையிலான யுத்தம் தான் இது''என்றார்.