Skip to main content

''இது நல்லதல்ல...'' -ராமதாஸ் எச்சரிக்கை

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களுக்கும் நன்மை அளிக்காது. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என அடுத்தடுத்து பொதுத்தேர்வு எழுத வேண்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படக்கூடும். அத்துடன் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நல்லதல்ல என கூறியுள்ளார்.

 

Ramadoss



மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 
 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதுமான மத்திய அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.

 

புதிய கல்விக் கொள்கையின் வரைவு கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில்,  மாநில அரசு பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீட்டிக்கப்படும் என்றும், உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்தி திணிக்கப் படாது என்றும், தேசியக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்படும் போது இந்தி கட்டாயப் பாடம் என்ற பரிந்துரை நீக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இப்போது தேசியக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டு, நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.


 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் இறுதி செய்யப்பட்ட வடிவத்தின்படி இந்தி திணிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மும்மொழிக் கொள்கை  கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும், அதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஏதேனும் ஒரு செம்மொழியை 6&ஆம் வகுப்பு முதல் 12&ஆம் வகுப்பு வரையிலான 7 ஆண்டுகளில் ஏதேனும் 2 ஆண்டுகளுக்கு மூன்றாவது மொழியாக கற்க வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மும்மொழிக் கொள்கை என்பதே நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மொழித் திணிப்பு தான். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 

இந்தியாவில் மூத்த செம்மொழி என்பது தமிழ் மொழி தான். இது தவிர சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா ஆகியவையும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிப்பது தான் மத்திய அரசின் திட்டமாகும். மூன்றாவது மொழியை ஏதேனும் இரு ஆண்டுகளுக்கு மட்டும் படித்தால் போதுமானது என்றாலும் கூட, காலப்போக்கில் மூன்றாம் மொழியை படிப்பது மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.


 

இந்தி மொழி திணிக்கப்படாது என்ற சலுகையை காட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவது முறையல்ல. இந்தித் திணிப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் பிற மொழிகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை வெளியிட்டு, அது குறித்து பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்பதன் நோக்கமே, அவர்களின் உணர்வுகளை அறிந்து அவற்றை செயல்படுத்துவது தான். தேசியக் கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த  பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மும்மொழிக் கொள்கை கூடாது என்றும், இருமொழிக் கொள்கையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. இதே கருத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசுக்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.

 

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களுக்கும் நன்மை அளிக்காது. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என அடுத்தடுத்து பொதுத்தேர்வு எழுத வேண்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படக்கூடும். அத்துடன் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நல்லதல்ல.

 

மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. இதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இன்னும் கேட்டால் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்கள் விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொழிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இவை அனைத்துமே மாணவர்களின் விருப்பப்படி நடக்க வேண்டுமே தவிர திணிக்கப்படக் கூடாது. எனவே, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது; தமிழ்நாட்டில் இப்போதுள்ளவாறு இரு மொழிக் கொள்கையே தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.