Skip to main content

சட்டமன்ற உறுப்பினர்கள் நியமன வழக்கு; உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Nomination case of nominating legislators; Letter to the Registrar of the High Court!

 

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவை சேர்ந்த கே.வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது. புதுச்சேரி அரசு மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த நியமனம், புதுச்சேரி அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

 

இந்த நியமனத்தை எதிர்த்து கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்க தலைவருமான கோ.அ. ஜெகன்நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 20.05.2021 அன்று விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த், செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மு.ஞானசேகர், மத்திய அரசு, புதுச்சேரி அரசு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதேசமயம் கடந்த 24.05.2021 அன்று தற்காலிக சட்டப்பேரவை தலைவர் லட்சுமி நாராயணன்  மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 

இந்நிலையில், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடுக்கப்பட்ட வழக்கை உடனடியாக மீண்டும் விசாரிக்க வேண்டும் என ஜெகன்நாதன் உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.  

 

Nomination case of nominating legislators; Letter to the Registrar of the High Court!

 

கோ.அ.ஜெகன்நாதன் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், "புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவை சேர்ந்த கே.வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம்  நியமித்தது. புதுச்சேரி அரசு மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்ட இந்த நியமனம், அரசியலமைப்புக்கு எதிரானது . எனவே மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்யவும், அவர்கள் செயல்படத் தடை விதிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன்.  இவ்வழக்கு கடந்த 20.05.2021 அன்று விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் டாக்டர் அனிதா சுமந்த், செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரராகிய எனது சார்பில் மூத்த வழக்கறிஞர் மு.ஞானசேகர், எதிர் மனுதாரரான மத்திய அரசு, புதுச்சேரி அரசு, நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்க, வழக்கை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக திரு.க.இலட்சுமிநாராயணன் பதவி ஏற்பார் எனவும், அவர் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் செய்தி வெளியானது. 

 

இந்நிலையில், கடந்த 24.05.2021 அன்று தற்காலிக சட்டப்பேரவை தலைவருக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று கூறி கடிதம் எழுதினேன். 

 

ஆனால், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்பதோடு, வழக்கு விசாரணைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயலாகும். மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இவ்வழக்கில் வக்காலத்தும், எழுத்து மூலம் பதிலுரையும் தாக்கல் செய்யாமல் வாதிட்டுள்ளார். இது நீதிமன்ற விதிகளுக்கு முரணானது என்பதோடு, நீதிமன்றத்தில் ஏற்புடைய நடைமுறையும் அல்ல.

 

எனவே, மேற்சொன்ன உயர்நீதிமன்ற வழக்கை மீண்டும் விசாரணை செய்ய எனது வழக்கறிஞர் மு.ஞானசேகரன் அவர்கள் கடந்த 26.05.2021 அன்று உயர்நீதிமன்ற பதிவாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.