Skip to main content

நம்பிக்கை இல்லா தீர்மானம்; திமுக உறுப்பினர்கள் மனு 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

no confidence motion in karur union president posting

 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 11 பேரும்,  திமுக சார்பில் 4  பேரும்  வெற்றி பெற்றனர். இதில் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 8 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. அதன்பிறகு திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு அணி மாறியதால் தற்போது திமுகவின் பலம் 11 ஆகவும்  அதிமுக கூட்டணி பலம் 4 ஆகவும்  உள்ளது.

 

இந்நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதாவின் கணவரும், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக  செயலாளருமான ரங்கசாமி தனது மனைவியின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றிய நிர்வாகத்தில் அதிக அளவில் தலையிட்டு வருவதாகவும், ஒப்பந்தப் பணிகள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தனது பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டும், அதற்கான ரசீதை முன்கூட்டியே எடுத்து விடுவதாகவும் பல்வேறு  ஒப்பந்தங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் அதனைக் கேட்கும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் அதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் துணை போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும்  அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமியை பதவியிலிருந்து நீக்க, வரும் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் 11 திமுக குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி,  உரிய விசாரணை செய்து பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது