Skip to main content

நம்பிக்கை இல்லா தீர்மானம்; திமுக உறுப்பினர்கள் மனு 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

no confidence motion in karur union president posting

 

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் 15 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைச் சேர்ந்த 11 பேரும்,  திமுக சார்பில் 4  பேரும்  வெற்றி பெற்றனர். இதில் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லதா ரங்கசாமி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும்  ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 8 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் தோகைமலை ஒன்றியத்தில் திமுகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. அதன்பிறகு திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் ஒருவர் மீண்டும் அதிமுகவிற்கு அணி மாறியதால் தற்போது திமுகவின் பலம் 11 ஆகவும்  அதிமுக கூட்டணி பலம் 4 ஆகவும்  உள்ளது.

 

இந்நிலையில், தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதாவின் கணவரும், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக  செயலாளருமான ரங்கசாமி தனது மனைவியின் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒன்றிய நிர்வாகத்தில் அதிக அளவில் தலையிட்டு வருவதாகவும், ஒப்பந்தப் பணிகள் மற்றும் அரசு வாகனங்களுக்குத் தனது பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டும், அதற்கான ரசீதை முன்கூட்டியே எடுத்து விடுவதாகவும் பல்வேறு  ஒப்பந்தங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் அதனைக் கேட்கும் ஒன்றிய கவுன்சிலர்களை ஆட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் அதற்கு ஒன்றியக் குழுத் தலைவர் துணை போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும்  அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தோகைமலை ஒன்றியக் குழுத் தலைவர் லதா ரங்கசாமியை பதவியிலிருந்து நீக்க, வரும் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் 11 திமுக குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்தனர். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி,  உரிய விசாரணை செய்து பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.