Skip to main content

சமூக நீதிக்கு வெடி வைக்கும் மோடியின் கொத்தடிமை கல்வி கொள்கை! -கொந்தளிக்கும் வேல்முருகன் 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
velmurugan tvk

 

 

மத்திய பாஜக அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்து வருகின்றன. இந்த சூழலில், மத்திய அரசு எதிராக வலிமையான போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் வேல்முருகன்.

 

இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது, பல வரலாற்று நிகழ்வுகளையும் சம்பவங்களையும் சுட்டிக்காட்டி, புதிய கல்வி கொள்கைகளால் ஏற்படப் போகும் ஆபத்துகளை விரிவாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

 

நம்மிடம் பேசிய அவர், “மெக்காலே கல்வித் திட்டம் என நாம் கேள்விப்பட்டிருப்போம். அது மோசம் என்பதாக சிலர் திட்டியதை பார்த்து நாமும் திட்டியிருப்போம். அப்படித் திட்டியவர் மேல்சாதியினரே, திட்டமிட்டேதான் திட்டினர். அது உலகில் புதிய விழிப்புணர்வு பொங்கிய நேரம். ஆனால் மூட நம்பிக்கை நாடாக இருந்தது பிரிட்டிஷ் இந்தியா, அதில் தாங்கள் மட்டுமே படித்து கொண்டிருந்த புரோகிதம் மற்றும் சடங்காச்சாரத்தை கற்பிக்கும் சமஸ்கிருத கல்வியை அகற்றிவிட்டு, எல்லோரும் கல்வி கற்கும் விதத்தில் நவீன கல்வியை மெக்காலே கொண்டுவந்துவிட்டாரே என்ற  எரிச்சல்தான் திட்டுவதற்கு காரணமாக அமைந்தது.

 

நவீன கல்வியில் சமஸ்கிருதம், பெர்சியன் மொழிகள் அகற்றப்பட்டன; பதிலாக ஆங்கிலமும் அவரவர் தாய்மொழியும் ஊடக மொழியானது. மாணவர்களிடையே சாதி, மத பேதம் மற்றும் தீண்டாமை ஒடுக்குமுறை களையப்பட்டது. ஏராளமான கல்விக்கூடங்கள் நிறுவப்பட்டு, கல்வி மறுக்கப்பட்ட அடித்தள மக்கள் கல்வி பெற வாய்ப்பு ஏற்பட்டது.

 

இன்றும் நாம் போற்றும் தலைவர்கள், சான்றோர்கள், அரசியலாளர்கள், சாதனையாளர்கள் பலர் மெக்காலே கல்வி திட்டத்தில் பயின்றவர்கள்தான். அவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், காமராஜர், கே.டி.கே. தங்கமணி, சி.பா.ஆதித்தனார், ஜோதிபாசு ஆகியோர். இதில் தொடக்க பள்ளி மட்டுமே படித்த பெரியார், காமராஜரை தவிர மற்ற அனைவரும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். மெக்காலே கல்விதான் மிகச் சிறந்தது என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

 

சுதந்திர இந்தியாவிலும் நீடித்த மெக்காலே கல்வி திட்டத்தை 1968இல் பிரதமர் இந்திரா காந்தி மாற்றினார். அது சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கல்விக்கொள்கை ஆனது. 1986இல் இரண்டாவது தேசிய கல்விக்கொள்கையை பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். அதுதான் தற்போது அமலில் இருக்கிறது. 1992இல் பிரதமர் நரசிம்மராவ் அதில் சில திருத்தங்களைச் செய்தார்.

 

மெக்காலே கல்வி திட்டத்திற்குப் பின் வந்த கல்விக் கொள்கைகள் பொதுவாக படிப்படியாக தேய்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் பாதிப்பு தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகக் குறைவுதான். அதிலும் கேரளம், தமிழ்நாட்டிற்கு மிகமிக குறைவு. வடஇந்தியாவிலும் இந்தி பேசும் மாநிலங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். 

 

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தாய்மொழியான இந்திப் பாடத்திலேயே 10ஆம் வகுப்பு தேர்வில் 85 விழுக்காட்டினர் தோல்வியடைந்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

 

இப்போது முந்தைய யாவற்றிலும் படுமோசமான மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை ஒன்றியக் கல்வித்துறை என்று மாற்றப்பட்டு, அதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த புதிய கல்விக்கொள்கைக்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மோடி அரசு 2017இல் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு 2019 ஜூன் 1ந் தேதி புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; ஒற்றை நாடு - ஒற்றைக் கல்விமுறை என்பதை அங்கீகரித்தது; கார்ப்பரேட்டுகளுக்கு கொத்தடிமைகளைத் தேர்வு செய்ய உதவுவது; 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மூலம் மாணவர்களை வடிகட்டி அவர்களின் இடைநிற்றல்களை அதிகரிப்பது; மும்மொழித் திட்டம் மூலம் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது. எப்படியெனில், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும்; மற்ற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் கற்று தர வேண்டும். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மூன்றாவது மொழியாக விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்று திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

 

அனைத்து உயர்கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வு; 6ஆம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும்; இளங்கலை 3-4 ஆண்டுகள் நடத்தப்படும்; முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும்; இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்; உயர் கல்வி நிலையங்களின் தன்னாட்சி உரிமம் ஒழிக்கப்படும்; உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்; பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பின்னர் படிப்பை தொடரலாம்; M.Phil படிப்புகள் நிறுத்தப்படும்.

 

இந்த புதிய கல்விக்கொள்கை, நமது கல்விமுறையை பின்னோக்கி புராண காலத்துக்கு செலுத்தும் கொள்கை; மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல்; கல்விக்காக கோச்சிங் சென்டர்களை நாடத் தூண்டும். மூன்று வயதிலேயே கல்வியைத் தொடங்க செய்வது பிள்ளைகளின் குழந்தை பருவத்தை பறிப்பதாகும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை உருவாக்கும் அதிகாரத்தை NCERTக்குக் கொடுத்திருப்பதால், இது மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களை திறனற்றவர்களாக மாற்றும் வேலையைச் செய்வதற்காகவேதான்.

 

இப்படிப்பட்ட புராண, இதிகாச கட்டுக்கதைகளில் வரும் குருகுலக் கல்வி, ராஜாஜியின் குலக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் மறுபதிப்பான மோடியின் புதிய கல்விக் கொள்கை-2020-க்குத்தான் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

கரோனா ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள் பெரிதாக தங்கள் எதிர்ப்பை காட்டவோ, போராடவோ முடியாது என்பதை பயன்படுத்தி, மக்கள்விரோத சட்டங்களை அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. இது, இறுதியில் மோசமானச் சாவை சந்தித்த உலகின் மிகக்கொடிய சர்வாதிகாரிகளான முசோலினி, ஹிட்லர் ஆகியோரின் நாசிசம்  மற்றும் ஃபாசிசத்தை விட பல மடங்கு கொடூரமானதாகும். இந்தப் புதிய கல்விக் கொள்கைக்கு முன்னும் மூன்று அவசரச் சட்டங்கள் மற்றும் வரைவுகளைக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.

 

நிதி சட்டம் 2020 - கடந்த மார்ச் 27ந் தேதி குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, புதிய நிதி சட்டம் ஏப்ரல் 1, 2020ல் இருந்து அமலுக்கு வந்தது. இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டது. நிதி மசோதா என்பது அரசின் செலவினங்களுக்கு சட்டப்படி ஒப்புதல் தெரிவிப்பதற்கானதாகும். மக்களவை மற்றும்  மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் வரும் நிதியாண்டிற்கான தொகையை அரசு செலவு செய்ய முடியும். ஆனால் இந்த ஆண்டு,விவாதம், மத்திய அமைச்சரின் உரை எதுவும் இல்லாமல் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.

 

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், நாடு அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளதால், நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்கிறார்.

 

புதிய மின்சார திருத்தச் சட்ட வரைவு - 2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் வரவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் கடந்த ஏப்ரல் 17ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவின்படி, ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது; கூட்டாட்சி முறைக்கு எதிராக இருக்கிறது; விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்திற்கு தடை போடுகிறது; மின்துறையில் மாநிலத்தின் நிதிச்சுமையைக் கூட்டுகிறது.

 

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 - பெரும் திட்டங்கள், தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலை விஸ்தரிப்புகள் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 அறிவிக்கைப்படி திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். பிறகு, மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கும்; இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கும்.

 

இந்நிலையில், பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்குக் கேடாகவும், சூழலியல் தாக்க மதிப்பீடு அறிக்கை, மக்கள் கருத்துக்கேட்பு ஆகியவை தேவையில்லை என்கிறது மோடியின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020.

 

அந்த வரிசையில் நான்காவதாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை கல்வியினின்றும் அப்புறப்படுத்தி, சமூக நீதிக்கு வேட்டு வைக்கிறார் மோடி! கார்ப்பரேட் தொண்டூழியத்திற்கான மோடியின் கொத்தடிமைக் கல்விமுறைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலளித்ததை வன்மையாக கண்டிப்பதுடன், அதனைத் திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் மோடி அரசுக்கு எதிராக வலிமையான போராட்டத்தை முன்னெடுப்பேன்!’’ என கொந்தளித்தார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர் வேல்முருகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.