Skip to main content

“அ.தி.மு.க.வின் அடையாளம் சசிகலா!” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Nellai Subramania Raja who removed from the AIADMK press meet


சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனைக்குள்ளாகி, நான்கு வருடச் சிறைத் தண்டனைக்குப் பிறகு, விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லை சுப்பிரமணிய ராஜா, சுவரொட்டி அடித்தது பரப்பரப்பை உண்டாக்கியது. பரபரப்பு அடங்கும் முன்னரே, 'கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டார்' என சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. 

 

இந்நிலையில், "எத்தனையோ அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம் வருவார்கள். கட்சியும் எங்கள் பக்கம் வரும். சசிகலா கர்நாடகாவை விட்டு தமிழ்நாட்டிற்கு வரும் நாளில், அதனை எதிர்பார்க்கலாம்" என அடுத்த பரபரப்பினை உருவாக்கியுள்ளார் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா.


அ.தி.மு.க. கட்சியின் சார்பு அணிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். மன்றத்தின் நெல்லை மாநகர் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தவர் சுப்பிரமணிய ராஜா. கடந்த 1989ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பணியாற்றி வரும் இவர், சொத்துக்குவிப்பு வழக்கு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான சசிகலாவை வரவேற்கும் விதமாக, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படங்களுடன் சசிகலாவின் படத்தினை பெரிதாகப்போட்டு, "அ.தி.மு.க.வை வழிநடத்த வருகை தரும் 'பொதுச் செயலாளர்' அவர்களே வருக.! வருக.!" என்கின்ற வாசகங்களுடன் சுவரொட்டியை நெல்லை சந்திப்பு பகுதி தொடங்கி மாநகரெங்கும் ஒட்டி அமர்க்களப் படுத்தினார். இது கட்சியின் தலைமைக்கு எரிச்சலூட்டிய நிலையில் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நெல்லை சுப்பிரமணிய ராஜாவை நீக்கியது கட்சித்தலைமை.

 

Nellai Subramania Raja who removed from the AIADMK press meet

 

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சுப்பிரமணிய ராஜா, "சசிகலா விடுதலைக்காக வால் போஸ்டர் ஒட்டியதாக கட்சியில் இருந்து என்னை நீக்கியதாகக் கேள்விப்பட்டேன். அப்படி என்றால் ஏற்கனவே அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கழக நிர்வாகி கோகுல இந்திரா ஆகியோர் இதற்கு முன்பு சசிகலாவிற்கு ஆதரவாகப் பேசி உள்ளார்கள்.  அவர்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் சசிகலா பக்கம் தான் இருக்கிறார்கள். சசிகலா கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும்போது இங்கு உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அவர் பின்னால் செல்வார்கள். சசிகலா மட்டும்தான் இந்தக் கட்சியையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் மீண்டும் கொண்டுவர முடியும். அவர்தான் அ.தி.மு.க.வின் அடையாளம். அவரை உதாசீனப்படுத்தினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகத்தில் 75 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படும்" என்றார்.



ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த காலகட்டத்தில், இன்றைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அடுத்த முதல்வராகத் தகுதியுடையவர் சசிகலாவே.! இதனை வலியுறுத்தி 1008 பால்குடம் எடுத்து ஜெ.சமாதியில் அஞ்சலி செலுத்துவோம்" எனத் தமிழ்நாட்டில் சசிகலாவிற்காக முதன்முதலாக வீர முழக்கமிட்டது இதே நெல்லையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள்: விவேக்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.