Skip to main content

“நீட் விலக்கு பாராட்டும் பெருமையும் எடப்பாடிக்கே...” - அமைச்சர் உதயநிதி 

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

NEET Exemption should be appreciated and proud  says Minister Udhayanidhi

 

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டம் சார்பில் விருதுநகரில் நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார், “கடந்த மாதம் காஞ்சிபுரத்தில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்து, இன்று விருதுநகர் மாவட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். விருதுநகர் மாவட்டம், வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம். நிறைய சுதந்திரப் போராட்ட வீரர்களை, விளையாட்டு வீரர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய மாவட்டமாகும். உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு நமது  இளைஞரணி. 

 

கழகத்தில் 22 அணிகள் இருந்தாலும்,  முதல் அணியாக  இளைஞர் அணி விளங்குகிறது. கழகத் தலைவர் இளைஞர் அணியைத் தொடங்கி, படிப்படியாக பொறுப்புகள் வகித்து, உழைத்து முன்னேறி முதலமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். மதுரையில் ஒரு மாநாடு எப்படி நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நமது இளைஞர் அணியினர் நடத்தும் மாநாடு இந்தியாவிற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் கிராமப்புற மாணவர்கள் மருத்துவராகலாம் என்ற நிலையை உருவாக்கியவர், முத்தமிழறிஞர் கலைஞர். இதுவரை 22 பேரை இழந்திருக்கிறோம்.  

 

NEET Exemption should be appreciated and proud  says Minister Udhayanidhi

 

இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம், தொடர்ந்து நீட் விலக்கு வேண்டுமென சட்ட போராட்டம் நடத்தினோம். இப்படி திராவிட மாடல் அரசும், திமுகவும் தொடர்ந்து போராடி வருகிறது. இதை மக்கள் போராட்டமாக மாற்றுவதற்காகவே நாம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இதில் நீங்கள் மட்டும் கையொப்பம் இடுவதோடு நிற்காமல், உங்கள் குடும்பத்தார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் நீட் தேர்வு நிலையை எடுத்துக்கூறி, கையொப்பமிடச் செய்யவேண்டும்.  எடப்பாடி அவர்களே,  இதில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டும். இதை அரசியலாக்க வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து நீட் விலக்கினைப் பெறுவோம். இதற்காக கிடைக்கும் அனைத்து பாராட்டுகளையும், பெருமையையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் குடும்பம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

 

ஆம் தமிழ்நாடு முழுவதும் எங்கள் குடும்பம்தான். மோடி அரசில் அதானியின் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வருகிறது என்ற விமர்சனம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதற்கு, இதுவரைக்கும் மோடி பதிலளிக்கவில்லை. மோடி சொன்ன வாக்குறுதிகளில் ஒன்றே ஒன்றை மட்டும் நிறைவேற்றியுள்ளார். நான் ஆட்சிக்கு  வந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று கூறினார். இப்போது இந்தியா என்ற பெயரை மாற்றியிருக்கிறார். சிஏஜி அறிக்கையின்படி, மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.” எனப் பேசினார்.     

 

NEET Exemption should be appreciated and proud  says Minister Udhayanidhi

 

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்  குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.