Narayanasamy criticism Rangaswamy will leave without knowing where he is

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், தலைவருமான ரங்கசாமி முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். சட்டப்பேரவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 10 உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு 9 உறுப்பினர்கள், தி.மு.க.வுக்கு6 உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள், 6 சுயேச்சை உறுப்பினர்கள் என மொத்தம் 33 உறுப்பினர்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் என்.ஆர். காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும் எனப் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் பேசுகையில், “‘2026இல் நீங்கள் (ரங்கசாமி) பாரதிய ஜனதாவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்பீர்களா?’ என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ரங்கசாமி ஓடிவிட்டார்.

Advertisment

அப்படியென்றால் ரங்கசாமி 2026இல் பாரதிய ஜனதா கூட்டணியில் தேர்தலில் நிற்பதற்கு ரங்கசாமிக்கு விருப்பம் இல்லையா?. அவர் எந்த கூட்டணியில் நிற்கப் போகிறார். என்னுடைய கணக்குப்படி ரங்கசாமி பாரதிய ஜனதாவில் கூட்டணியில் சேரவில்லை என்றால் அவருடைய கட்சி காணாமல் போய்விடும். ரங்கசாமி இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார். என்.ஆர். காங்கிரஸ் கட்சி சுக்குநூறாக உடைந்துவிடும். ரங்கசாமிக்குப் பாரதிய ஜனதாவை எதிர்த்துத் தேர்தலில் நிற்பதற்கு முதுகெலும்பு கிடையாது” எனப் பேசினார்.