Skip to main content

ராசிபுரத்தில் குடைச்சல் கொடுத்த 'புள்ளபூச்சி'; சரண்டர் ஆன திமுக! 

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

Namakkal Rasipuram urban election.. independent candidate who won dmk

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராசிபுரம் நகராட்சியையும் ஆளும் திமுக தட்டித் தூக்கினாலும் கூட, குறிப்பிட்ட ஒரு வார்டில் புள்ளபூச்சி என விமர்சிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் திமுகவை தோற்கடித்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மிகப்பழமையான நகராட்சிகளுள் ஒன்று. 1948ல் உதயமானது. இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 24 வார்டுகளில் அதிரிபுதிரியாக வென்று, நகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. திமுகவின் அசத்தலான வெற்றி எந்தளவுக்கு பேசப்படுகிறதோ அதே அளவுக்கு 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளரிடம் திமுக மரண அடி வாங்கியதும் நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது. 

 

Namakkal Rasipuram urban election.. independent candidate who won dmk
சதீஸ்

 

நடந்தது இதுதான்... 

 

ராசிபுரம் நகர திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சதீஸ், டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏரியாவில் பசையுள்ள பார்ட்டி. முன்னாள் திமுக நாமக்கல் மா.செ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர். அவருடைய இன்புளூயன்சில் தன்னுடைய கம்பெனிக்கு சில அரசு ஒப்பந்தங்களைக் கூட பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

Namakkal Rasipuram urban election.. independent candidate who won dmk
சசிரேகா

 

இந்நிலையில், 12வது வார்டில் தன் மனைவி சசிரேகாவுக்கு சீட் கேட்டு கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி.யிடம் பேசியிருக்கிறார் சதீஸ். அவரோ, 'பார்த்துக்கலாம்' என்று சொல்லிவிட்டு பின்னர் சீட் தர மறுத்திருக்கிறார். ஆனால் காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர் என்பதால்தான் சதீஸின் மனைவிக்கு சீட் மறுக்கப்பட்டதாக சொல்கின்றனர். 

 

அதிருப்தி அடைந்த சதீஸ், 12வது வார்டில் தன் மனைவி சசிரேகாவை சுயேச்சையாக களமிறக்கினார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக உடனடியாக அவர் திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். வார்டில் மொத்தமுள்ள 1840 வாக்குகளில் அவர் சார்ந்த சவுராஷ்டிரா சமூக வாக்குகள் மட்டும் 600 உள்ளன. திமுகவோ, அந்த வார்டின் செயலாளர் சிவராமனின் மனைவி சரிதாவை களமிறக்கியது. அதிமுக சார்பில் மா.ராதாமணி போட்டியிட்டார். 

 

ராசிபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் தன்னையும், திமுகவையும் எதிர்த்து சதீஸின் மனைவி போட்டியிடும் 12வது வார்டு, நகர்மன்ற தலைவராக வாய்ப்பு உள்ளதாக பேசப்படும் திமுக நகர அமைப்பாளர் சங்கரின் மனைவி போட்டியிடும் 15வது வார்டு, அதிமுக முக்கிய புள்ளி பாலசுப்ரமணியம் மனைவி கவிதா போட்டியிடும் 11வது வார்டு ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே மா.செ., கூடுதல் கவனம் செலுத்தினார் என்றும், பணத்தை தண்ணீராய் வாரி இறைத்தார் என்றும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். 

 

இது தொடர்பாக திமுக உடன்பிறப்புகள் மேலும் கூறுகையில், ''12வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சதீஸின் மனைவி வெற்றி பெற்றால், அது காந்தி செல்வனுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதினார் மா.செ. ராஜேஷ்குமார். அந்த வார்டில் மட்டும் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் தலா 5000 ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாயை அள்ளி தெளிக்கப்பட்டு உள்ளது. 

 

Namakkal Rasipuram urban election.. independent candidate who won dmk
ராஜேஷ்குமார்

 

அதுமட்டுமின்றி பரப்புரை நடந்த ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு  பிரியாணி விருந்தும் களைகட்டியது. இந்த ஒரு வார்டில் மட்டும் ஆளுங்கட்சி பரப்புரை, பூத் கமிட்டி, விருந்து என கிட்டத்தட்ட 70 லகரங்களை அள்ளி கொட்டியிருந்தது. 

 

சதீஸும் லேசுபாசான ஆள் இல்லீங்க. அவரும் திருப்பதியில் இருந்து 1000 லட்டு வாங்கி வந்து, வாக்காளர்களுக்கு கொடுத்து ஆன்மீக ரீதியாகவும், சென்டிமென்டாகவும் 'டச்' பண்ணிட்டாரு. அதுமட்டுமின்றி, வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாயை பாய்ச்சினார். தேர்தல் நேரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுக்கவே இந்த வார்டு பற்றிதான் ஒரே பேச்சாக இருந்தது. இப்படி ஆளும்தரப்பும், சுயேச்சை தரப்பும் வார்டு மக்களை கரன்சி மழையில் சொட்டச் சொட்ட நனைய வைத்துவிட்டனர்” என்றனர்.  

 

தேர்தலில் 1356 வாக்குகள் பதிவாகின. இதில் சதீஸின் மனைவி சசிரேகா 840 வாக்குகள் பெற்று, வெற்றி அடைந்தார். திமுகவுக்கு 483 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக வெறும் 33 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தது. ராசிபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் சதீஸின் மனைவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து சதீஸிடம் கேட்டபோது, ''திமுகவில் 20 ஆண்டுகளாக உழைத்து இருக்கிறேன். கடந்த 2006ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனேன். அதனால் இந்தமுறை மீண்டும் வாய்ப்பு கேட்டேன். காந்திசெல்வன் ஆதரவாளர் என்பதால் எனக்கு மா.செ. சீட் தர மறுத்துவிட்டார். 

 

திமுக வேட்பாளர்கள் கூட்டத்தில், என் பெயரைச் சொல்லி 'அவனெல்லாம் புள்ளபூச்சி. தேர்தலில் ஜெயிக்க முடியாது. ஒரு பொருட்டாகவே நினைக்க வேணாம்,' என்று விமர்சனம் செய்திருக்கிறார். இதை கேள்விப்பட்டு ரொம்பவே ஆதங்கப்பட்டோம். அதனால்தான், ஒரு புள்ளப்பூச்சி என்னென்ன செய்யும் என்று செயலில் காட்டிவிட்டோம். 

 

Namakkal Rasipuram urban election.. independent candidate who won dmk
வாக்கு சேகரிப்பில் சசிரேகா

 

ஒவ்வொரு வாக்காளரையும் பத்துக்கும் மேற்பட்ட தடவை வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தோம். சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதால், இனி திமுகவில் சேரும் திட்டம் இல்லை. மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செய்வோம்'' என்றார். 

 

எது எப்படியோ... கட்சிக்குள்ளும், வேட்பாளர்களுக்கும் கடும் போட்டி என்றால் வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தானே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.