Skip to main content

நாகை, மயிலாடுதுறை எம்.பி.க்களுக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட எம்.எல்.ஏ.

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
nagapattinam mayiladuthurai  mps

 

 

கரோனா வைரஸின் கோர முகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவில் துவங்கி கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்ட பலரும் சிக்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இரண்டு எம்.பி.க்களுக்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

"அவர்கள் இருவருக்கும் கரோனா தொற்று உருவாக காரணம் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டதுதான்" என்கிறார்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும். மேலும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கும் கரோனா தொற்று இருக்குமோ என்கிற சந்தேகத்தில் உள்ளனர்.

 

இதுகுறித்து விசாரித்தோம், "கடந்த 30 ஆம் தேதி காலை மயிலாடுதுறை புதிய மாவட்ட உருவாக்கம் குறித்து மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. அன்று மாலையே மயிலாடுதுறையிலும் கூட்டம் நடைபெற்றது. இரு கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளும், ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு, மாவட்ட பிரிவினையை சம்பந்தமான தங்கள் கருத்துகளை கூறினர்.

 

இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜீம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கமும் இரண்டு இடங்களிலும் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இருவருமே இரண்டு மேடைகளிலும் அருகருகே அமர்ந்திருந்திருந்தனர்.

 

இந்தநிலையில் ஒன்றாம் தேதி மாலை செல்வராஜுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் மிகவும் சோர்வாக இருப்பதாக கூறியதால் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் கூறினர். அதனால் நாகையில் தனிமையில் தங்கியிருந்தார். ஆனால் நேற்று இரண்டாம் தேதி அவருக்கு மேலும் உடல் நிலை அதிகமாக சோர்வடைய, கரோனா பரிசோதனை முடிவிலும் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அதன் பிறகு அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில்தான் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் செ,ராமலிங்கத்திற்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிறகு அங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

 

கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட தனி அலுவலர் லலிதாவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதோடு இரண்டு கூட்டத்திலும் கலந்துகொண்ட மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரியவருகிறது. மயிலாடுதுறையில் நடைபெற்ற அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு விழாவில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.