Skip to main content

"சமூக நீதி அமைப்புகளோடு இணைந்து போராடுவோம்!" - தமிமுன் அன்சாரி!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

thamimum

 

டெல்லியில் விவசாயிகள் மீது நடைபெற்ற அரச வன்முறைகளைக் கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாகப் பெற்றுக் கொடுக்கக் கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் இன்று (28.01.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமை ஏற்றார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார். இதில், காவிரி விவசாயச் சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவேரி தனபாலன், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமதாஸ், கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

 

நிறைவாகப் பேசிய ம.ஜ.க. பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, "விவசாயிகள் 65 நாட்களாகப் போராடி வருகிறார்கள். இதுவரை 64 விவசாயிகளைப் பறிகொடுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு தினத்தன்று அமைதியாகப் போராடிய விவசாயிகளுக்கு மத்தியில் வலதுசாரி மதவெறிக் கும்பல் புகுந்து கலவரம் செய்துள்ளார்கள். இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அங்கு போராட்டத்தில் இறந்த விவசாயிக்கு மத்திய அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.


மேலும், சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராடுவோம் என்றும் விவசாயச் சங்கங்களோடும், பொதுவுடைமைக் கட்சிகளோடும், சமூக நீதி அமைப்புகளோடும் இணைந்து போராடுவோம் என்றும் பேசினார்.

 

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சேக் மன்சூர், திருப்பூண்டி சாகுல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சபுர்தீன், அகமதுல்லா, முன்சி யூசுப்தீன், கண்ணு வாப்பா சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் ஆரிப், ரெக்ஸ் சுல்தான், அப்துர் ரஹ்மான், பாரக், ஒன்றியச் செயலாளர்கள் நகர நிர்வாகிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.